பெர்சனல் வாழ்க்கையில் பெரிய இழப்பு.. ஆனாலும் ஓடுறேன்.. காரணம் இதுதான்! விஜய் ஆண்டனி எமோஷனல்
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல கஷ்டங்கள் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். அதில் தன்னுடைய பர்சனல் வாழ்க்கையில் பெரிய இழப்பு நடந்துச்சு ஆனாலும் நான் நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பதற்கு காரணம் என்ன என்பது பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நடிகர், இயக்குனர், இசை அமைப்பாளர், பாடகர் என்று பல முகங்களை கொண்ட விஜய் ஆண்டனி தன்னம்பிக்கையான நபர் என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்திருந்தார். இது விஜய் ஆண்டனி மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களையும் திரை துறையையும் பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

விஜய் ஆண்டனி பல மேடைகளில் தன்னம்பிக்கை தரும் வகையில் பேசி இருந்தாலும் அவருடைய சொந்த வீட்டிலேயே அவருடைய மகள் எடுத்த முடிவு அவரை நிலைகுலைய வைத்திருந்தது. ஆனாலும் அதற்கு பிறகு தான் நடித்துக் கொண்டிருந்த திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ரோமியோ திரைப்படம் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து அவர் பல பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்களை உருக்கமாக பேசியிருந்தார். அதில் நான் எப்போதுமே எனக்காக ஓடவேண்டும் என்று நினைக்கவில்லை. என்னுடைய ஆசை கனவு வேறு மாதிரி இருந்தாலும் நான் என்னுடைய குடும்பத்திற்காகவும் ,மனைவி குழந்தைகளுக்காகவும் தான் ஓடி கொண்டிருக்கிறேன். ஆனால் எதிர்பாராத விதமாக என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரிய இழப்பு நடந்துடுச்சு(மகள் இறப்பு).
அந்த நேரத்தில் நான் அதில் உடைந்து போய் இருந்தபோது என்னை நம்பி படம் பண்ணுறவர்களை நான் ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காகத்தான் என்னுடைய பயணத்தை மீண்டும் நான் தொடங்கி இருக்கிறேன். இந்த உலகத்தில் நான் மட்டும் சோகங்களை சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கவில்லை. எல்லா வீட்டில் இருக்கும் பெண்களும், ஆண்களும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லோருடைய வாழ்க்கையிலும் பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
நாங்க சின்ன குழந்தையாக இருக்கும்போது அப்பா இறந்த பிறகு நாங்க திருநெல்வேலியில் ஒரு வீட்டில் வசித்து வந்தோம். அம்மா நாகர்கோவிலில் கவர்மெண்ட் வேலை பார்த்தாங்க. அதனால காலையில் தினமும் எங்களுக்கு சாப்பாடு எல்லாம் வைத்து எங்களை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு அவசர அவசரமாக கிளம்பி பஸ் ஏறி திருநெல்வேலிக்கு வந்து சேருவாங்க. அங்கிருந்து நடந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் அங்க ரயில் ஏறி நாகர்கோவிலுக்கு போவாங்க.
அங்கிருந்து ஸ்டேஷனில் இறங்கி நடந்து அவங்களோட ஆபீசுக்கு போவாங்க. பிறகு மீண்டும் வீட்டுக்கு அதே போல வந்து எங்களுக்கு தேவையான வேலைகளை செஞ்சு தருவாங்க. இப்படி எங்க அம்மா மட்டும் அல்ல ஒவ்வொரு பெண்களும் இப்படித்தான் வீட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த மாதிரி ஓடிக் கொண்டிருப்பதில்லை. நம்முடைய குடும்பத்திற்காகவும் நம்மை நம்பியவர்களுக்காகவும் தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோலத்தான் என்னுடைய ஓட்டமும் போய்க்கொண்டிருக்கிறது.
பொதுவா எனக்கு வீட்டு பிரச்சனைகள் என்னுடைய மனைவி கொண்டு வருவது கிடையாது. அவங்களே எல்லாத்தையும் பார்த்துக்கிறாங்க. ஆனால் நான் இப்போ அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு காரணம் அந்த திரைப்பட நடிகர்களும் இயக்குனர்களும் தான். அவர்கள் என்னை நம்பியதால் நான் எனக்கு இருக்கிற கஷ்டத்தால் அவர்களை கஷ்டப்படுத்த முடியாது என்று தான் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் விஜய் ஆண்டனி உருக்கமாக பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications