ஸ்ரீ ரெட்டி அப்போ ஏன் மன்னிப்பு கேட்டாங்க? அதுல என் பேரு இல்ல.. பெண்கள் இதை பண்ணுங்க.. விஷால் பேட்டி
சென்னை: நடிகர் விஷால் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கும் நபர்களை செருப்பால் அடியுங்கள் என்று நடிகைகளுக்கு அட்வைஸ் சொல்லி இருந்த நிலையில் ஏற்கனவே ஸ்ரீ ரெட்டி விஷால் குறித்து சொன்ன குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு விஷால் "அவ ஒரு பைத்தியக்காரி" என்று ஸ்ரீ ரெட்டி பற்றி சில விஷயங்களை பேசி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஷால் தன்னுடைய 47வது பிறந்த நாளை முதியோர் இல்லத்தில் கொண்டாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது அவரிடம் மலையாள சினிமா உலகில் நடக்கும் அவலங்களை ஹேமா கமிட்டி வெளியே கொண்டு வந்திருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஷால் பேசிக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் தமிழ் சினிமாவிலும் பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அது பற்றி நீங்க என்ன சொல்லுறீங்க என்று கேட்கப்பட்ட நிலையில், அதற்கு விஷால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று யாராவது கேட்டால் அந்த இடத்தில் செருப்பை கழட்டி அடித்து விடுங்க என்று சொல்லி இருந்தார்.
அதோடு ஹேமா கமிட்டி போன்று ஒரு கமிட்டியை தமிழிலும் விரைவில் கொண்டு வந்து விடுவோம். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். அதே நேரத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி சில வருடங்களுக்கு முன்பு உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தாரே என்று கேள்வியாளர்கள் கேட்டிருந்ததற்கு விஷால் எனக்கு ஸ்ரீ ரெட்டி யாருன்னு தெரியாது, ஆனா அவங்க செஞ்ச சேட்டை தெரியும் என்று சொல்லி இருந்தார்.
இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களில் நடிகை ஸ்ரீ ரெட்டி என்னிடம் நிறைய செருப்பு இருக்கு. நீ யாருன்னு எனக்கு தெரியும். உன்னோட எங்கேஜ்மென்ட் எதுக்காக நின்னுச்சுனு ஞாபகம் இல்லையா? என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தார். இந்த நிலையில் நடிகர் விஷால் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது இது பற்றி பேசுகையில், மீடு பிரச்சனை சில வருடங்களுக்கு முன்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போ கூட என்னுடைய பெயரும் கார்த்தியின் பெயரும் பெரிதாக அடிப்படவில்லை.
ஆனால் நடிகை ஸ்ரீ ரெட்டி தான் பைத்தியக்காரி போன்று என்னுடைய பெயரை பயன்படுத்தினார். அதற்கு பிறகு அவர் எதற்காக ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியில் மன்னிப்பு கேட்டார். அதற்கு பிறகும் நடிகர் சங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை என்று விஷால் கூறி இருக்கிறார். அதோடு திரைத்துறையில் சிலர் பெண்களை படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசி வருகின்றனர்.
அந்த விஷயத்தில் சில பெண்கள் அப்போது தங்களை படுக்கைக்கு அழைத்தவர்களுடன் இணங்கி சென்று விட்டு பிறகு அவர்கள் மீது கோபமோ வெறுப்போ ஏற்படும் போது அதை பாலியல் குற்றச்சாட்டாக மாற்றுகிறார்கள், இது ஒரு தவறான அணுகுமுறை. ஒருவரின் பெயரை நீங்கள் கெடுக்க வேண்டும் என்றால் சும்மா அவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை வைத்தாலே போதும் அது பற்றிக்கொண்டு செல்லும்.
நாம் ஆம்பளையாக இதைப் பற்றி பேசும்போது யாரும் நம்ப மாட்டார்கள். சினிமாவில் நிறைய உப்புமா கம்பெனிகள் இருக்கின்றன, அந்த கம்பெனிகளுக்கு இதுதான் வேலை. அவர்கள் தங்களிடம் நடிக்க வரும் பெண்களிடம் பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபடுகின்றனர். இது எங்கே முடிவுக்கு வரும் என்றால் நடவடிக்கையை பெண்ணாகிய நீங்கள் உடனடியாக தொடங்க வேண்டும்.
நீங்கள் அப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்போது ஒரு ஆண் மகனுக்கு உங்கள் மீது பயம் வர ஆரம்பித்து விடும். இல்லை என்றால் நீங்கள் என்னிடம் இப்படி நடந்து கொண்டால் நான் நாளைக்கு திரை துறையில் இது குறித்து சொல்லி விடுவேன் என்று சொல்ல வேண்டும். அப்படி என்றால் சம்பந்தப்பட்டவர்கள் உங்கள் பக்கத்தில் கூட வரமாட்டார்கள். இந்த மாதிரி பிரச்சனை சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது. இதனால் பெண்கள் இந்த விஷயத்தை வெளியே சொல்வதற்கு பயப்படுகிறார்கள். அந்த பயம் நிச்சயமாக இருக்கக் கூடாது என்று விஷால் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications