ஜேகேபியிடம் விழுந்த புதுமைப்பெண் சிந்து.. இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ?.. மறக்க முடியாத சிந்துபைரவி
சென்னை: சிந்துபைரவி படத்தில் சிவக்குமாரும் ஜேகேபி கதாபாத்திரத்திலும் சுஹாசினி சிந்து கதாபாத்திரத்திலும் அருமையாக நடித்திருப்பார்கள். புதுமைப் பெண்ணாக சிந்து இருந்த போதிலும் பைரவிக்கு துரோகம் செய்ய அவருக்கு எப்படித்தான் மனசு வந்ததோ தெரியவில்லை.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: கே.பி. சாரின் சிந்து பைரவி பார்த்துக் கொண்டிருந்தேன். கே.பியின் பார்வையில் சிந்து ஒரு அறிவார்ந்த ஞானமுள்ள புதுமைப் பெண். ஜே.கே.பி என்கிற சங்கீத வித்வான் கர்நாடக இசையை பாடிய போது புரியாத இந்தக் கீர்த்தனையை புரியும் படி பாடுங்களேன் என வாதிடுகிறாள்.

அவளே 'பாடறியேன் படிப்பறியேன்' என்கிற தமிழிசைப் பாடலையும் பாடுகிறாள்.
ஜே.கே.பி படிப்படியாக சிந்துவின் அறிவில் மயங்கிப் போகிறார். ஆம். அறிவில் தான். அழகில் இல்லை. சிந்துவின் சங்கீத அறிவு தான் அவரை அவளுக்கு முன் கட்டிப் போட வைக்கிறது. சிந்துவின் குரல் கேட்கத் துடிக்கிறார். ஓர் இரவில் போன் செய்து குரலைக் கேட்டு தன்னை வெளிப்படுத்தாமல் முத்தமும் கொடுக்கிறார்.
தன் திருமண மோதிரத்தை சிந்துவுக்கு அணிவிக்கிறார். ஜே.கே.பி என்கிற சங்கீத முனி சிந்து என்கிற மேனகை முன் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பதை அழகாக காட்சிப்படுத்தி இருப்பார் கே.பி.
இந்தப் பக்கம் சிந்து ஒரு அனாதைப்பெண். தன்னை யாரோ ஒருவனுக்கு பெற்றெடுத்து அநாதை இல்லத்தில் விட்டு விட்ட தன் அம்மாவின் குடும்பத்தைப் பார்க்கிறாள்.
தூர இருந்துப் பார்த்தாலும் அருகில் சென்று அம்மா என அழைக்கக் கூட முடியாமல் வெளியே வருகிறாள். எதிர்பாராத விதமாக அந்தக் குடும்பத்திலேயே நெருங்கிப் பழகும் வாய்ப்பு சிந்துவுக்கு கிடைக்க சொந்த அம்மா, தங்கை, குடும்பம் என அவள் மனம் பூரித்து தான் போகிறது. அவளது உறவு வலிகளெல்லாம் மறந்து போகிறது.
ஜே.கே.பிக்காவது சிந்து என்கிற பெண்ணின் சங்கீத ஞானத்தின் மேல் காதல் என ஏற்றுக் கொள்ளலாம். ஜேகேபி ஆண் என்கிற நெடில் என எடுத்துக் கொள்ளலாம். சிந்துவுக்கு ஜே.கே.பி மேல் வருவதை எப்படி எடுத்துக் கொள்வது?. அதுவும் பைரவி என்கிற அப்பாவிப் பெண்ணின் கணவரை பிடுங்கிக் கொண்டு போவதில் சிந்துவின் ஞான அறிவு எங்கே போகிறது?
தான் பிறந்ததே ஒரு அயோக்கிய ஆண் தன் அம்மா என்கிற அப்பாவிப் பெண்ணை ஏமாற்றி உறவு கொண்டதால் என்கிற போது சிந்து எப்படி பைரவிக்கு துரோகம் செய்து தன் அம்மாவின் அதே தப்பைச் செய்வாள்? தன் விதி மீறிய காதலால் ஜேகேபியோடு உறவு கொண்டால் பிறக்கும் குழந்தையும் சமூகத்தில் சிந்துவின் நிலையில் தானே வாழும்?
"என் விதி இப்படி தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே...." எனப் பாடும் சிந்து அதே கர்ப்பத்தை தன் வயிற்றில் உருவாக்குவது ஏன்?
அப்போ அனாதை விடுதியில் வளர்ந்த ஒரு பெண் அதே மாதிரி குழந்தைப் பிறக்க தானும் ஒரு கருவியாக இருப்பாளேயானால் அவளுக்கு என்ன சோஷியல் அறிவு இருக்கிறது?. என்ன சங்கீத அறிவு இருந்து என்ன பயன்?.
ஜேகேபி என்கிற ஆணின் வலையில் விழுந்த சிந்து சாதாரணமான தமிழ்ப்பெண்ணை விட கீழானவள். இதில் குழந்தையை பெற்றெடுத்து அதை பைரவிக்கு பரிசாகக் கொடுக்கிறாளாம்....
"பைரவிக்கா... இது உங்கக்கிட்ட இருந்தா முறையான குழந்தை... என்கிட்ட இருந்தா முறை தவறிப் பிறந்தது. Illegitimate child..." என்கிற டயலாக் வேற.... என்றாவது ஒரு நாள் அந்த குழந்தை சிந்துவின் வீட்டிற்கு வந்து இதே மாதிரி தூர நின்று பார்த்துவிட்டு "இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ... நாடோடிப் பாட்டுக்கு தாய் தந்தை யாரோ?"ன்னு பாடாதா?.
இந்த புதுமைப்பெண் சிந்து கேரக்டரில் பிய்த்து உதறியதற்குத்தான் சுஹாசினிக்கு தேசிய விருது....
பாவம் அந்த முதல்மரியாதை குயிலு.. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications