பிக் பாஸ் வீட்டில் ஆண்ட்ரியா ‘ஆசை’ பட்டது நடக்குமா..?
விஸ்வரூபம் 2 படக்குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றனர்.
சென்னை: போட்டியாளர்கள் பிக் பாஸ் 2 வீட்டை விட்டு வெளிவரும் வரை தியேட்டர்களில் விஸ்வரூபம் 2 ஓடிக் கொண்டிருக்கும் என நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று விஸ்வரூபம் 2 படக்குழுவினர்களான நடிகைகள் ஆண்ட்ரியா, பூஜா குமார், பாடகர் சத்ய பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் போட்டியாளர்களைச் சந்தித்தனர். அப்போது போட்டியாளர்கள் மத்தியில் அவர்கள் பாடல் ஒன்றை பாடிக் காட்டினர்.

பின்னர் விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாம் டிரெய்லர் அகம் டிவி வழியே ரிலீஸ் செய்யப்பட்டது. படக்குழுவின் அன்புப் பரிசாக விஸ்வரூபம் 2 பட ரிலீஸ் தேதி அச்சிடப்பட்ட டிசர்ட் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டது.
பின்னர் படக்குழுவினர் வீட்டை விட்டு வெளியேறிய போது, விஸ்வரூபம் 2 படத்தைப் பார்க்க வேண்டும் என ஆவலாக இருப்பதாக போட்டியாளர்கள் தெரிவித்தனர். அதற்கு ஆண்ட்ரியா, 'நிச்சயம் நீங்கள் இந்த வீட்டை விட்டு வெளியேறும் வரை இப்படம் தியேட்டரில் ஓடும்’ என நம்பிக்கைத் தெரிவித்தார்.
விஸ்வரூபம் 2 வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் முதல் பாகம் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே ரிலீசானது. ஆனால் சொல்லிக் கொள்ளும்படி தியேட்டர்களில் ஓடவில்லை. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 முடியும் வரை இப்படம் திரையரங்குகளில் ஓடும் என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். இந்தக் கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால், நிச்சயம் 50 நாட்களுக்கு மேல் தியேட்டரில் இப்படம் ஓடினால் மட்டுமே பிக் பாஸ் வெற்றியாளரால் இப்படத்தைப் பார்க்க முடியும்.
பார்ப்போம், ஆண்ட்ரியா சொன்னது நடக்கிறதா என..












Click it and Unblock the Notifications