மனோஜ் திடீர் இறப்பிற்கு காரணம் இதுதானா? பாரதிராஜாவுக்கு எமனாக மாறிய பிரச்சனை! இயக்குநர் விளக்கம்
சென்னை: இயக்குநர் பாரதிராஜா மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தைச் சுற்றி பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறிப்பாக, மகன் மனோஜின் இறப்புக்கு பின்னால் இருந்த மன அழுத்தம், அதன்பிறகு பாரதிராஜா எதிர்கொண்ட கடன் சுமை, சொத்து டாக்குமெண்ட் தொடர்பான சிக்கல் போன்ற விஷயங்கள் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பாரதிராஜா குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த இயக்குநர் மனோஜ் குமார் பேசிய தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
இயக்குநர் மனோஜ் குமார் பேட்டி
மனோஜ் குமார் கூறியதன்படி, பாரதிராஜாவின் மகன் மனோஜின் வாழ்க்கையில் பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்திய விஷயம் அவரது சினிமா பயணம்தான். மகன் பெரிய நடிகராக வர வேண்டும் என்ற ஆசையில் பாரதிராஜா பல முயற்சிகள் செய்தார். தாஜ்மகால், அல்லி அர்ஜுனா உள்ளிட்ட படங்கள் மூலம் மனோஜை முன்னிலைப்படுத்த முயன்றதோடு, பின்னர் அவர் இயக்குநராக வரவும் ஆதரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

மனோஜின் மன வருத்தம்
அதிலும் குறிப்பாக, "அப்பா இவ்வளவு செலவு செய்து என்னை முன்னிலைப்படுத்த முயன்றும் நான் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை" என்ற வருத்தம் மனோஜுக்குள் இருந்ததாக மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். ஹீரோவாகவும், பின்னர் இயக்குநராகவும் நிலைநிறுத்த முடியாத மனக்கசப்பு அவரை பாதித்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மனோஜ் இறப்பிற்கான காரணம்
மனோஜை இயக்குநராக கொண்டு வர முயன்றபோது கூட பாரதிராஜா ஒரு கோடிக்கு மேல் முதலீடு செய்ததாகவும், அந்த முயற்சியும் வெற்றியாக மாறாதது மனோஜுக்கு கூடுதல் மன உளைச்சலை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதோடு, மனோஜுக்காக எடுத்த இந்த சினிமா முயற்சிகளே பாரதிராஜாவுக்கு பெரிய பொருளாதார சுமையாக மாறியதாகவும் மனோஜ் குமார் கூறியுள்ளார். படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க பாரதிராஜா வங்கிகளில் கடன் வாங்கியதோடு, வெளியிலும் கடன் பெற்றதாக அவர் கூறுகிறார். ஐடிபிஐ வங்கி மற்றும் எல்ஐசி வழியாக எடுத்த கடன்களை அடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாம்.
அந்தக் கடன்களை சமாளிக்க தேனியில் பள்ளிக்கூடம் கட்ட நினைத்து வைத்திருந்த ஒரு பெரிய இடத்தை விற்று ஒரு பகுதி கடனை அடைத்ததாகவும், மீதிக் கடனை அடைக்க நீலாங்கரை வீட்டுப் பின்னால் இருந்த ஒன்பது கிரௌண்ட் நிலத்தை விற்க ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த நிலத்தை விற்க ஒப்பந்தமும் போடப்பட்டு, முன்பணமும் வாங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மீதமாக கிடைக்க வேண்டிய தொகையை பெற்று எல்ஐசி மற்றும் ஐடிபிஐ கடன்களை அடைக்கலாம் என்ற திட்டம் இருந்தது. ஆனால் அந்த கட்டத்தில்தான் மனோஜின் திடீர் இறப்பு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மனோஜ் மறைந்த பிறகு, அந்த நிலம் தொடர்பான முக்கிய டாக்குமெண்ட் அனைத்தும் அவரது வசம் இருந்த நிலையில், பின்னர் அவை மனைவி நந்தனாவின் பொறுப்பில் சென்றதாகவும், அந்த டாக்குமெண்டை பெறுவதற்காக பாரதிராஜா இரண்டு முறை முயற்சி செய்ததாகவும் ஆனால் அது திரும்ப கிடைக்காததால் நிலம் விற்பனை முடிவடையாமல் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பாரதிராஜா உயிரோடு இருக்கும்போதே அடைக்க நினைத்த கடன்கள் அப்படியே நீண்டதாகவும், அதுவே அவருக்கு பெரிய மனவருத்தமாக மாறியதாகவும் மனோஜ் குமார் கூறியுள்ளார். ஒரு பக்கம் மகன் இறந்த துயரம், இன்னொரு பக்கம் மகனுக்காக எடுத்த முயற்சிகளில் ஏற்பட்ட நஷ்டம், அதற்காக வாங்கிய கடன்களை அடைக்க முடியாத நிலை - இந்த மூன்று விஷயங்களும் சேர்ந்து பாரதிராஜாவை மிகவும் பாதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சொத்து பங்கீடு
மேலும், பாரதிராஜா தனது பிள்ளைகளுக்கு சொத்துகளை முன்கூட்டியே பிரித்து எழுதி வைத்திருந்ததாகவும் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். மனோஜின் பெயரில் டி.நகர் வீடு, ஜெமினி பகுதி சொத்து உள்ளிட்டவை இருந்ததாகவும், ஜனனிக்கும் தனியாக வீடுகள் மற்றும் சொத்துகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதனால், வெளியே பேசப்படுவது போல "ஆயிரம் கோடி சொத்துக்கு சண்டை" என்ற அளவுக்கு விஷயம் இல்லை; ஆனால் கடன் சுமை உண்மைதான் என்பதே அவரது பேச்சின் சாரமாக உள்ளது.
மொத்தத்தில், மனோஜ் குமார் கூறிய தகவல்களில் இருந்து வெளிவரும் விஷயம் என்னவென்றால் மனோஜின் மன உளைச்சலுக்கு சினிமா தோல்விகள் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன; அதேபோல், மகன் இறப்புக்குப் பிறகு கடன் சுமை மற்றும் முடியாமல் போன சொத்து விற்பனை பாரதிராஜாவை கடைசி வரை துரத்தியிருக்கின்றன என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications