பிக்பாஸ் 2: திரித்துச் சொன்ன ப்ரோமோ... அதிருப்தியில் மக்கள்!
பிக்பாஸ் ப்ரோமோ வீடியோக்களால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவைப் பார்த்துவிட்டு நிகழ்ச்சியில் பரபரப்பாக ஏதாவது இருக்கும் என எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் தான் பதிலாகக் கிடைக்கிறது.
பிக்பாஸ் சீசன் 2 தொடங்கி நான்கு தினங்கள் ஆகியும், இன்னும் பரபரப்பாக அங்கு ஒன்றும் நடைபெறவில்லை. நடைபெற்ற இரண்டு சண்டைகளுமே சாப்பாட்டுக்காக இருந்ததால், அது ருசிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவில், மும்தாஜ் கதறி அழுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
|
ப்ரோமோவால் பரபரப்பு:
அந்த ப்ரோமோவில் முதலில் மும்தாஜ், சென்ராயனுடன், ‘கட்டிப்பிடி கட்டிப்பிடிடா' பாடலுக்கு ஆடுவது போலவும், பின்னர் கதறி அழுவது போலவும், அங்கிருப்பவர்கள் சென்றாயனை விரட்டி அடிப்பது போன்றும் காட்சிகள் இருந்தது. இதனால் நேற்றைய எபிசோட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
வையாபுரி ஞாபகம்:
ஆனால் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானதோ வேறு கதை. சென்றாயனுக்கும், டேனிக்கும் சக போட்டியாளர்கள் முடியை நேராக்கும் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து விடுகிறார்கள். பின்னர் மாடர்ன் உடையில் கலக்கலாக வெளியில் வருகிறார் சென்றாயன். இதைப் பார்த்தால், இதேபோன்று போன சீசனில் வையாபுரிக்கும் மாடர்ன் உடை அணிவித்து போட்டியாளர்கள் மகிழ்ந்தது நம் நினைவுக்கு வருகிறது.
குஷி:
பின்னர் மும்தாஜுடன் கட்டிப்பிடி கட்டிப்பிடி என்ற குஷி பாடலுக்கு நடனமாடினார் சென்றாயன். அதனைத் தொடர்ந்து, ‘நான் மும்தாஜுடன் டான்ஸ் ஆடிவிட்டேன்' என குழந்தைபோல குஷியாக அங்கிருந்து சென்று விட்டார் அவர்.
அதிர்ச்சி:
அதன் பிறகு, அங்கு நின்றிருந்த ஷாரிக்கைப் பார்த்து திடீரென கதறி அழ ஆரம்பித்துவிட்டார் மும்தாஜ். காரணம் அவர் மும்தாஜின் அண்ணன் மகனைப் போலவே இருக்கிறாராம். இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதிருப்தி:
பின்னர் ஒருவழியாக ஷாரிக்கே மும்தாஜை சமாதானம் செய்தார். ஆனாலும், மும்தாஜ் தொடர்ந்து அழவே, ஷாரிக்கை அங்கிருந்து வெளியே போகச் சொல்கின்றனர். இந்த ஆடியோவையும், சென்றாயனின் வீடியோவையும் இணைத்துத் தான் அந்த ப்ரோமோ உருவாக்கியுள்ளனர். இதனால் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு உப்புச்சப்பில்லாமல் போய்விட்டது.