மஹத்திற்கு இப்படி ஒரு நிலைமையா... கண்ணீர் விட்டு அழுத பாலாஜி!
மஹத்தை ரிலீஸ் செய்து விட்டு பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள மஹத்திற்கு சாப்பிடுவதற்கு பிக் பாஸ் களி அளித்ததைப் பார்த்து, பாலாஜி கண்ணீர் விட்டு அழுதார். ஆனால், மறுநாளே பாலாஜியை சிறையில் அடைத்தார் பிக் பாஸ்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் அதிகமுறை விதிகளை மீறிய போட்டியாளராக மஹத் அடையாளம் காணப்பட்டதால், அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதோடு மற்ற போட்டியாளர்களுக்கு அளிக்கப்படும் உணவும் அவருக்கு அளிக்கப்படாது என பிக் பாஸ் அறிவித்தார்.
இதனால் பிக் பாஸ் உத்தரவுப்படி யாஷிகா, மஹத்தை சிறையில் அடைத்தார்.
தண்டனை:
இதுவரை மற்ற போட்டியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோது, சக போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட உணவு தான் அவர்களுக்கும் அளிக்கப்பட்டது. ஆனால், இம்முறை தண்டனையை கடுமையாக்க விரும்பிய பிக் பாஸ், மஹத்திற்கு அந்த சலுகையை மறுத்தார்.
ஸ்பெஷல் களி:
இதனால் மஹத்திற்கு அப்படி என்ன ஸ்பெஷல் உணவு அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு விடையாக நேற்று அவருக்கு களி உணவாக அளிக்கப்பட்டது. வழக்கமாக சிறையில் உள்ள கைதிகளுக்கு இது தான் உணவாகத் தரப்படும்.
கிலி ஏற்படுத்திய களி:
எனவே, அதன் அடிப்படையில் ஜெயிலில் அடைக்கப்பட்ட மஹத்திற்கு களியும், அதற்கு ஒருவகை குழம்பும் தரப்பட்டது. இதை ஆச்சர்யத்துடன் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் பார்த்தனர். களி என்றால் என்ன கேட்டு நமக்கு கிலி வேறு ஏற்படுத்தினார்கள்.
பாலாஜி கண்ணீர்:
இது ஒருபுறம் இருக்க மஹத் களியைப் பிய்த்து அதனை குழம்பில் தோய்த்து சாப்பிடுவதைப் பார்த்து பாலாஜி கண்ணீர் விட்டு அழுதார். இதற்கு முன்பு திருடன் போலீஸ் டாஸ்க் விளையாடிய போது, போலீசாக இருந்த மஹத்திற்கு சாப்பாடு கூட தராமல் அலைக்கழித்த பொதுமக்கள் கூட்டத்தில் பாலாஜியும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வைஷ்ணவிக்கு நோ:
ஆனால், இந்த நிலை அப்படியே தொடரவில்லை. நேற்று மஹத்தை வெளியில் அனுப்பி விட்டு அவருக்கு பதில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். மும்தாஜ் அணியில் அதிகம் சுறுசுறுப்பாக இல்லாத நபரை சிறையில் அடைக்கலாம் எனக் கூறப்பட்டது. அதற்கு வைஷ்ணவி தான் சிறைக்குச் செல்ல வேண்டும் என மஹத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். ஆனால், பாலாஜி தானாகவே முன் வந்து சிறைக்கு சென்றார்.