Bigg Boss Muthukumaran: திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம்.. வெற்றி நிச்சயம்.. பிக்பாஸ் முத்துக்குமரன் பூரிப்பு!
தூத்துக்குடி: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முத்துக்குமரன், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று அங்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது வேண்டுதலை செய்து முடித்தார். பின்னர் அவரது வெற்றியின் ரகசியம் என்ன என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.

இங்குள்ள கடற்கரையில் குளித்துவிட்டு கிணற்றிலும் நீராடிவிட்டு முருகனை வணங்குகிறார்கள். திருச்செந்தூர் முருகனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அந்த நம்பிக்கையை முருகனும் காப்பாற்றி வருவதாக பலர் கூறுகிறார்கள்.
இதனாலேயே அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் திருச்செந்தூர் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்டோர் அடிக்கடி திருச்செந்தூருக்கு விசிட் அடிக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றியாளரானார் முத்துக்குமரன். செந்தமிழில் பேசி அசத்தும் முத்து, நிறைய கவிதைகள், பாடல்களையும், நீண்ட தமிழ் வசனங்களையும் பேசி காட்டினார்.
அவருக்கு அவருடைய தாய் தான் முதல் தமிழ் ஆசான் என பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என முதல் ஆளாக வெளியே வந்த ரவீந்திரன் சந்திரசேகரன் அப்போதே கணித்து விட்டார். இதைத் தொடர்ந்து அவரது ஆட்டத்தை பார்த்து மக்களும் முடிவு செய்தனர்.
அந்த வகையில் கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே நடந்தது. இதில் கடைசியாக பிக்பாஸ் வீட்டிற்குள் முத்துக்குமரன், சவுந்தர்யா, விஷால் ஆகியோர் இருந்தனர். இவர்களில் 3-ஆவது இடம் விஷாலுக்கு கிடைத்தது. இரண்டாவது இடம் சவுந்தர்யாவுக்கு கிடைத்தது.
இந்த நிலையில் அவர் பிக்பாஸில் 41 லட்சம் ரூபாய் வென்றார். இந்த பணத்தில் குறிப்பிட்ட சதவீதம் வரி போக மீதமுள்ள பணம் முத்துக்குமரனுக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளரான நிலையில் முத்துக்குமரன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார். இதையடுத்து எல்லா சுவாமிகளையும் கும்பிட்டுவிட்டு விழுந்து வணங்கினார்.
தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த முத்துக்குமரனுடன் பக்தர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செல்பி எடுத்தனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தேன். முருகன் அருளால் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வென்றேன். இதனால் முருகனுக்கு நன்றி செலுத்த வந்தேன் என்றார். வெற்றி பணத்தில் வீடு கட்ட ஒரு தொகை கொடுத்துவிட்டு, தனது நண்பர்கள் இருவருக்கு கடை வைக்க உதவி செய்ய வேண்டும் என்றும் அரசு பள்ளிக்கு பாரதியார் கவிதை உள்ளிட்ட புத்தகங்களை வாங்கி தர வேண்டும் என்றும் பிக்பாஸ் மேடையிலேயே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications