விஜய் காரில் தொங்கிய சிறுவனின் பரிதாப நிலை.. இதற்கு காரணம் இவங்கதான்! சீரியல் நடிகை ரிஹானா ஆதங்கம்
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஏற்படும் நெரிசல், பாதுகாப்பு சிக்கல்கள், சில இடங்களில் நடந்த உயிரிழப்புகள் போன்றவை குறித்து பலரும் கவலை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், தொண்டர்களின் நடத்தை குறித்து சீரியல் நடிகை ரிஹானா வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

விஜய் பிரச்சாரம்
சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ரிஹானா தனது வீடியோவில் குறிப்பிடுகிறார். அந்த கூட்டத்தில் ஒரு சிறுவன் விஜயின் வாகனத்திற்கு முன்பக்கமாக ஏறி அவர் பக்கத்தில் போக முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் அந்த சிறுவனை தள்ளி கீழே இறக்கினர். அதற்கும் மேலாக, வாகனத்தின் இருபுறமும் இருந்த பாதுகாப்பு பணியாளர்கள், அந்த சிறுவனின் கால்களை இருபுறமாக இழுத்த சம்பவம் தான் தன்னை மிகவும் பாதித்ததாக ரிஹானா தெரிவித்துள்ளார்.
நடிகை ரிஹானா வீடியோ
"இது பார்க்கவே வேதனையாக இருந்தது. அவர்கள் பாதுகாப்புக்காக தான் இப்படி செய்திருந்தாலும், அந்த குழந்தைக்கு ஏதாவது ஆகிவிட்டால் யார் பொறுப்பு?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார். வண்டியில் ஏறி நிற்கும் சிறுவனை ஒரு பக்கம் ஒருவர், இன்னொரு பக்கம் மற்றொருவர் இழுக்கும் போது எலும்பு முறிவு அல்லது நரம்பு பாதிப்பு போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், விஜயின் அரசியல் பயணத்தில் ஏற்கனவே சில துயர சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் அவர் நினைவூட்டுகிறார். குறிப்பாக கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் உயிரிழந்த சம்பவம், அதேபோல் வாகனங்களை பின்தொடர்ந்து செல்லும் ரசிகர்களால் ஏற்படும் விபத்துகள் போன்றவை கவலைக்கிடமானவை என்று கூறுகிறார்.
ஆனால், இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க விஜயையோ அல்லது அவருடைய பவுன்சர்களையோ குறை சொல்ல முடியாது என்றும் ரிஹானா வலியுறுத்துகிறார். "இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள்தான். இவ்வளவு ஆபத்தான கூட்டங்களுக்கு குழந்தைகளை அனுப்புவது பெரிய தவறு. சில குழந்தைகள் வீட்டிற்கு தெரியாமல் வந்தாலும், இப்படிப்பட்ட இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே சொல்லி புரியவைக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
பெற்றோர்கள் காரணம்
மேலும், சமூக வலைத்தளங்களில் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சன வீடியோக்கள் வெளியிட்டு வரும் ஜூலியின் கருத்துகளையும் அவர் குறிப்பிடுகிறார். "அவர் சொல்வதெல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை. ஆனாலும் அவர் சொல்வதில் சில உண்மைகள் இருக்கிறது" என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வெளியிட்டதற்காக தன்னை விமர்சிக்கப்போவது உறுதி என்றும் ரிஹானா கூறியுள்ளார். "இதற்கு பிறகு கமெண்ட்ஸ்ல வந்து திட்டுவாங்கன்னு தெரியும். ஆனாலும் சொல்ல வேண்டியதை சொல்லணும்" என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ரசிகர்கள் கருத்து
ரிஹானாவின் இந்த கருத்துகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. பலரும், "ரசிகர்கள் மற்றும் தொண்டர்களே கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பு அவர்களது கையில்தான் இருக்கிறது" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், இந்த விவகாரம் ஒரு நடிகர் அல்லது ஒரு அரசியல் கட்சி பற்றிய விமர்சனமாக மட்டும் இல்லாமல், கூட்ட நெரிசலில் பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் மீண்டும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications