தமிழ்நாட்டிலதான்யா சித்தி.. எங்க பாண்டியில அதுக்குப் பேரு.. தொத்தி.. கலகலகத்த குட்டி சுட்டீஸ்!
சென்னை: சன் டிவியின் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாண்டிச்சேரி சிறுமி, எங்க தொத்தா மட்டும் வேற வீட்டுக்கு போயிருவாங்க என்று சொன்னார். அப்போது கோவை சரளா தொத்தாவா அது யாருப்பா தொத்தா என்று கேட்டார்.
பாண்டிச்சேரியில் சித்தியை தொத்தான்னு கூப்பிடுவாங்க என்று சொன்னார் சிறுமியின் சித்தி. பிறகு மீண்டும் தொத்தா இல்ல, தொத்தி என்று குழந்தை சொல்ல, தொத்தியா மறுபடியும் கோவை சரளா கேட்டார். தொத்தாவை சுருக்கி தொத்தி என்று மீண்டும் சொன்னார் அந்த பெண்.
ஓ..சித்தி...மாதிரி தொத்தி...யா என்று சன் டிவியின் சித்த்தீ மாதிரி அழைத்து காண்பித்தார். குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியை, நடிகை கோவை சரளா குழந்தைகளோடு குழந்தையாய் ஒன்றி விளையாடி, பேசி நிகழ்ச்சியை நடத்துவது பலரும் ரசித்து பார்க்கும்படி நன்றாக இருக்கிறது.
சித்த்தீ...தொத்த்தீ
பிறந்த ஊரு பாண்டிச்சேரி ஆயிட்டதால, அம்மாவுக்கு ஒரு தங்கச்சியும் இருந்ததால... மற்ற ஊர்களில் சித்த்தீ எனக்கு மட்டும் தொத்த்தீ ஆயிட்டாங்கப்பா என்ற காதலா காதலா திரைப்படத்தின் கமல்ஹாசன் டயலாக் மாதிரி இருந்தது பாண்டிச்சேரி குழந்தை தொத்தி என்றபோது. கோவை சரளா குழந்தைகளுக்கு காஞ்சனா திரைப்படத்தின் மூலம் மிக நன்றாக அறிமுகம் ஆகி இருப்பதால், அனைத்து குழந்தைகளும் இவரிடம் நன்றாக ஒட்டிக்கொண்டு, கலாய்த்தும் மகிழ்கின்றனர்.
என்ட்ரி பேய்
நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே குழந்தைகள் ஒளிந்து கோவை சரளாவை பேய் மாதிரி பயமுறுத்தி விளையாட்டுக் காண்பித்தனர். கோவை சரளாவும், பயந்து, ஒளிந்து இருக்கும் குழந்தைகளை கண்டு பிடித்து விளையாடினார். இது போல விளையாடினால் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டமாக இருப்பார்கள். அப்படிப் பார்க்கையில் குழந்தைகள் நிகழ்ச்சியை நன்றாகவே அனுபவித்து மகிழ்கின்றனர்.
நிகழ்ச்சியில் நடிகர் சூரி
நகைச்சுவை நடிகர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்றபோது ஒரு குழந்தை உங்களை என்றது. என்னைத் தவிர நடிகர்களில் யாரைப் பிடிக்கும் என்றபோது சூரி என்று சொன்னது பாண்டிச்சேரி குழந்தை. பரோட்டா சூரி கூட போனில் பேசலாமா என்று சரளா கேட்க, நீங்க போன் பண்ணினா அவர் எடுக்க மாட்டார். பிசியா இருப்பார் என்று சொன்னது. இல்லம்மா அவர் என் ஃபிரண்டுதான் உடனே எடுத்து பேசுவார் என்று கோவை சரளா சொல்லி, போன் போட, பிசி பிசின்னே வந்தது. பார்த்தீங்களா நான் சொன்னேன் இல்லே என்று குதூகலித்தது குழந்தை.
சிக்ஸ் பேக் இருக்கா
பின்னர் லைனில் வந்தார் நடிகர் சூரி, குழந்தைகளிடம் ஆசையாக பேசினார். நீங்க இப்போ சிக்ஸ் பேக்கா இல்லையா என்று ஒரு குழந்தை பேசியது. ரஜினிசார் கூட நடிக்கறதுக்கு ஆல் தி பேஸ்ட் சொன்ன குழந்தை அந்த படத்தில் உங்களுக்கு என்ன கேரக்டர் என்று கேட்டு அதிர வைத்தது.சூரி அதை சொல்லக் கூடாதுப்பா என்று சொல்லவும், எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க என்றும் கேட்டது.
பழனி கண்ணு தம்பி ராகவா
என்னை மாதிரி ஒரு டயலாக் பேசு பார்ப்போம் என்று கேட்டபோது, தம்பி ராகவா என்று குழந்தை கூப்பிட்டது. பின்னர் பழனி கண்ணு என்று கோவை சரளாவை, கமல்ஹாசன் கூப்பிடுவது போல ஒரு குழந்தை கூப்பிட்டது. இப்படி எல்லை மீறாமல், குழந்தைகளோடு குழந்தையாக ஒன்றி நடிகை கோவை சரளா நடத்தும் குட்டிச் சுட்டீஸ் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது.