சன் நியூஸ் முதன்மை ஆசிரியர் மு.குணசேகரனின் தந்தை மறைவு.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை: சன் நியூஸ் தொலைக்காட்சியின் முதன்மை செய்தி ஆசிரியர் மு. குணசேகரனின் தந்தை முனியா (வயது 97) வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை இயற்கை எய்தினார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
தருமபுரி மாவட்டம் பண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மு.குணசேகரன். செய்தித் துறையில் தினமணி, தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு என தமிழ் அச்சு, ஆங்கில அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். தற்போது சன் குழுமத்தின் சன் நியூஸ் சேனலில் முதன்மை செய்தி ஆசியராக பணிபுரிந்து வருகிறார்.

மு.குணசேகரனின் தந்தை முனியா, வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலையில் சென்னையில் காலமானார். சென்னை ஷெனாய் நகரில் உள்ள மு.குணசேகரன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முனியாவின் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.ராஜேந்திரன், செய்தி தொடர்பு துறை இயக்குனர் மோகன், மாநிலத் திட்ட குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது மு.குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர்.
மு .குணசேகரனின் தந்தை முனியா உடல் இன்று மாலை 5 மணிக்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான பண்டஅள்ளி கிராமத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
தந்தையை இழந்து வாடும் மூத்த ஊடகவியலாளர் மு.குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் துயரத்தில், நமது ஒன் இந்தியா தமிழ் குழுமமும் பங்கேற்று ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications