சூப்பர் சிங்கர் குழந்தைகளுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு.. சொன்னதை செய்து காட்டிய இமான்.. நெகிழ்ந்த சித்ரா
சென்னை: இசையமைப்பாளர் இமான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். கடத்த சில எபிசோடுகளுக்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குழந்தைகள் சிலருக்கு நான் இசையமைக்கும் பாடலுக்கு வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார். அதை அவர் இப்போது நிறைவேற்றி இருக்கிறார். சூப்பர் சிங்கர் குழந்தைகளுடன் பாடகி சித்ராவும் அந்த பாடலை பாடியிருக்கிறார். அது குறித்த நெகிழ்ச்சியான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பலர் சினிமாவில் பின்னணி பாடல்களாக மாறி இருக்கிறார்கள். இதற்கு பலரை எடுத்துக்காட்டாக சொல்லலாம். அஜய் கிருஷ்ணா, ராஜலட்சுமி, செந்தில் குமார் தம்பதி உட்பட பலர் இப்போது சினிமாவில் பிஸியாக பாடிக் கொண்டிருக்கிறார்கள். லைவ் கான்சர்டில் பாடி கொண்டிருக்கிறார்கள்.

பிரபலமான ஷோ
தங்களுடைய திறமையை வெளிக் கொண்டு வருவதற்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தங்களுக்கு பல விதத்தில் உதவியதாக பாடகர்கள் கூறியிருக்கிறார்கள். அதுபோல இந்த நிகழ்ச்சியில் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளாத சிலர் கூட போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் இதில் யார் ஜெயிக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்வதற்காக ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.
இமான் செய்த உதவி
இசைஅமைப்பாளர் இமான் இந்த சீசனில் நடுவராக கலந்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் சித்ரா மற்றும் மனோ போன்றோர் நடுவர்களாக இருக்கிறார்கள். அவர்களோடு இமான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பல குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கழிப்பறை வசதி இல்லாமல் இருந்த பள்ளிக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்.

குழந்தைகளுக்கு பாடல் வாய்ப்பு
இந்த நிலையில் இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் குழந்தைகளுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அதில் காயத்ரி, சாரா சுருதி, நஸ்ரின் மற்றும் ஆதிரா என நான்கு பேருக்கும் தன்னுடைய இசை அமைப்பில் உருவாகும் பாடலில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இதை ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இமான் சொல்லி இருந்தார். அதை இப்போது செய்து காட்டி இருக்கிறார்.
சித்ரா நெகிழ்ச்சி
பாடகி சித்ராவோடு இந்த நான்கு குழந்தைகளும் பாடி இருக்கிறார்கள். இது குறித்து சித்ரா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பேசும்போது என்னுடைய செல்ல பேத்திகளோடு நான் பேசி பாடியது எனக்கு ரொம்பவும் புது அனுபவமாக இருந்தது. என் பேத்திகள் நான்கு பேருமே அருமையாக பாடினார்கள் என்று உள்ளம் மகிழ்ந்து பாராட்டி இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபோல இமான் இதற்கு முன்பு படிப்பு செலவுக்கு கஷ்டப்பட்ட ஒரு குழந்தைக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலேயே படிப்பு செலவு மொத்தத்தையும் தான் ஏற்றுக் கொள்வதாக கூறி இருந்தார். இமானின் செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications