50 ஆண்களுக்கு நடுவே ஒரு பெண் ஆடுவது எப்படி? - 'குத்து பாடல்' கலாச்சாரம், மாரி செல்வராஜ் அனல் பறக்கும் கேள்வி
சென்னை: தமிழ் திரையுலகில், வசூல் ரீதியாக வெற்றியைப் பெரும் ஜனரஞ்சக சினிமாக்களுக்கும், சமூக யதார்த்தத்தைப் பேசும் கலை சினிமாக்களுக்கும் இடையே ஒரு நீடித்த போராட்டம் இருந்து வருகிறது. முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித் எனப் பலரும் கோடிகளில் பணம் புரளும் ஜனரஞ்சகப் படங்களையே விரும்பி நடிக்க, கதைக்கும் சமூகப் பொறுப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மாற்று சினிமா இயக்குநர்கள் சிலர் அலை கடலுக்கு எதிரே நீந்தும் மீன்களைப் போலத் தனித்து நிற்கிறார்கள். அதில் ஒருவர் தான் இயக்குநர் மாரி செல்வராஜ்.
இந்த மாற்று சினிமாவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்' என ஒவ்வொரு படத்திலும் சமூகத்தின் ஆழமான வேர்களைத் தொட்டு, பார்வையாளர்களின் மனதை உலுக்கியவர். தனது படங்களில் வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி, மக்களின் வாழ்வியலையும், வலிகளையும் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் மாரி செல்வராஜ், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் நேரடியாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் எழுப்பிய கேள்வி, நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருக்கும் ஒரு கலாச்சாரத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.

மாரி செல்வராஜ் பேட்டி
அதில், "50 ஆண்களுக்கு நடுவே ஒரு பெண்ணை ஆட வைக்கும் சினிமாவை நீங்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறீர்கள். நான் யாரிடம் சென்று இதைச் சொல்வது? 50 வருடங்களுக்கு முன்பே ஒரு பெண் இப்படி ஆடும்போது அதை ஏன் யாரும் தடுக்கவில்லை?. ஒரு ஆணும் பெண்ணும் ஆடினால் அது காதல். அல்லது ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஆடினால் அது கொண்டாட்டம். ஆனால், சுற்றிப் பல ஆண்கள் இருக்க ஒரு பெண் ஆடுவதை எப்படிப் புரிந்துகொள்வது?" - இந்த வார்த்தைகளில், ஒரு படைப்பாளியின் ஆதங்கமும் சமூகத்தின் மீதுள்ள அக்கறையும் அழுத்தமாகப் பதிந்திருந்தது.
சினிமாவின் குத்து பாடல் கலாச்சாரம்
சினிமா உலகில் 'ஐட்டம் சாங்' அல்லது 'குத்துப்பாடல்' எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்தக் காட்சிகள், படத்தின் கதைக்களத்திற்கு தொடர்பில்லாமல், வெறும் கவர்ச்சியைக் குறியீடாகக் கொண்டு உருவாக்கப்படுபவை. ஒரு நடிகை கவர்ச்சியான உடையில், பெரும் எண்ணிக்கையிலான துணை நடிகர்கள் (பெரும்பாலும் ஆண்கள்) சூழ நடனமாடுவது என்பது தமிழ் சினிமாவில் ஒரு எழுதப்படாத விதியாகவே மாறிவிட்டது. இது படங்களின் விளம்பரத்திற்கும், வியாபாரத்திற்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், சமூகத்தில் பெண்களின் உருவத்தைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்குகிறதா என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

மோனிகா பாடல் ஒரு உதாரணம்
சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மோனிகா' பாடலில் நடிகை பூஜா ஹெக்டே இதே பாணியில் நடனமாடியுள்ளார். சோசியல் மீடியாவிலும் பலர் பூஜா ஹெட்டே மாதிரி உடை அணிந்து கொண்டு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பாடல்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றாலும், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் எழுப்பும் தார்மீகக் கேள்விகள், சினிமா வெறும் பொழுதுபோக்கிற்கு அப்பாற்பட்டது, அது சமூகத்தின் கண்ணாடியாகவும் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
உங்கள் கருத்து
மாரி செல்வராஜ் எழுப்பியுள்ள இந்த ஆவேசமான கேள்விகள், தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், ரசிகர்களிடையேயும் ஒரு ஆழமான விவாதத்தைத் தூண்டி, எதிர்காலத்தில் சினிமாவின் இந்த 'குத்துப்பாடல்' கலாச்சாரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications