திரௌபதி 2 படத்தில் பாடியதற்கு மன்னிப்பு கேட்ட சின்மயி.. இது ‘கோழைத்தனம்’ என போஸ்ட் போட்ட மோகன் ஜி
சென்னை: இயக்குனர் மோகன் ஜி இயக்கிய திரௌபதி 2 படத்தில் தான் பாடிய பாடலுக்காக பாடகி சின்மயி மன்னிப்பு கேட்டு இருந்தார். இந்த நிலையில் சின்மயி மீதான விமர்சனங்களுக்கு இயக்குனர் மோகன் ஜி கண்டனம் தெரிவித்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இயக்குனர் மோகன் ஜி சில படங்களை இயக்கியிருக்கிறார். அதிலும் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்கள் இவர் இயக்கியதுதான். அதோடு சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் மோகன் ஜி சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டு அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பார்.

தன்னுடைய படங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்மத்தை கொட்டுகிறார் என்று இவர் மீது விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும். அதோடு இவர் இயக்கும் படங்களில் தாழ்த்தப்பட்ட சாதியை சார்ந்த இளைஞர்களை கெட்டவர்கள் போலவே காட்டுகிறார் என்ற புகார் இவர் மீது இருக்கிறது. தன்னுடைய சொந்த சாதியை மட்டும் உயர்ந்தது என்றும் மற்ற சாதியை அசிங்கப்படுத்தும் வகையிலேயே இவர் படம் எடுக்கிறார் என்று இவரிடம் சோசியேல் மீடியாவில் பலர் வாக்குவாதம் செய்து வருகிறார்கள்.
தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு அடிக்கடி பதில் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர் திரௌபதி 2 படத்தை இயக்கி இருக்கிறார். அந்த படத்தில் திரௌபதி படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடிக்க, நடிகை ரக்ஷனா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் "எம்கானோ" என்கிற பாடல் உருவாகி இருக்கிறது. இந்த பாடல் இன்று மாலை வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடியது பாடகி சின்மயி தான்.
சின்மயி இந்த பாடலை பாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தன் எக்ஸ் தளத்தில் போஸ்ட் போட்டிருந்தார். இதுதான் பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அந்த பதிவில், ஜிப்ரானை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்டுடியோவில் இருந்து என்னை பாட அழைத்த போது அங்கு சென்று பாடிவிட்டு வந்துவிட்டேன். அப்போது அங்கு ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் அந்த பாடலை பாடி இருக்க மாட்டேன்.
அந்த கொள்கைக்கும் எனக்கும் நிறைய முரண்பாடு உள்ளது, இதுதான் உண்மை என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். சின்மயி இப்படி பதிவிட்டதும் மோகன் ஜி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் என்னுடன் திரௌபதி 2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறி வைத்து தாக்க வேண்டாம்.
திரௌபதி 2 படம் பேசுவது என் சொந்த சிந்தனை. என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறி வைத்து தாக்குவது கோழைத்தனம் ஆகும் என்று கூறி இருக்கிறார். திரௌபதி 2வில் பாடியதற்காக சின்மயி மன்னிப்பு கேட்டதால் இவர் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications