என் குழந்தையை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு.. ரமணியம்மாள் உடலை பார்த்து கதறிய விஜே அர்ச்சனா
சென்னை: என் குழந்தையை இப்படி பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என ராக்ஸ்டார் ரமணி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்திய விஜே அர்ச்சனா கண்ணீர் சிந்தினார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரமணியம்மாள். இவரது அபார திறமையாலும் கணீர் குரலாலும் ஈர்க்கப்பட்டு இவர் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்றே அழைக்கப்படுகிறார்.
தனது சிறப்பான குரல் மூலம் நடுவர்களையும் கவர்ந்தார். ஒரு முறை இசையமைப்பாளர் அனிருத் வந்த போது கூட பாடல் பாடி அசத்தி அவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இதையடுத்து அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய் சேதுபதி
அதன்படி விஜய் சேதுபதியின் ஜுங்கா, சண்டக்கோழி 2, சூர்யாவின் காப்பான் உள்ளிட்ட படங்களில் ரமணியம்மாள் பாடியுள்ளார். அண்மையில் யோகி பாபு நடிப்பில் வெளியான பொம்மை நாயகி படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார். இந்த நிலையில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69. இவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு வேலைகள்
வறுமை காரணமாக வீட்டு வேலைகள் செய்து வந்த ரமணியம்மாள் கோவில் திருவிழாக்களில் பாடி வந்திருக்கிறார். காதல் படத்தில் இடம் பெற்ற தங்கச்சி கருப்பாய் பாடல் மூலம் சினிமாவில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இவர் காத்தவராயன், தெனாவட்டு, ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களிலும் பாடியுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைகாட்சியில் சரிகமப சீனியர் நிகழ்ச்சிக்கு அவர் கலந்து கொண்டார்.

முதல் பரிசு
இந்த நிகழ்ச்சியில் அவர் முதலிடத்தை பெற்றார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அஞ்சலி செலுத்த வந்த விஜே அர்ச்சனா செய்தியாளர்களிடம் கூறுகையில் பாட்டி எல்லாருக்கும் பாட்டிதான். ஷூட்ஷிங்கிற்கு முதல் ஆளாக வருவார். என்னை காலையில் 4 மணிக்கு அனுப்பிவிடுங்க, நான் என் சின்ன பையனுக்கு டீ போணும் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு விடுவார்கள் என சொல்லும் போதே அர்ச்சனா அழுகிறார்.

அர்ச்சனா அஞ்சலி
மேலும் அர்ச்சனா தொடர்கையில், பாட்டிக்கு அவருடைய குடும்பம்தான் எல்லாமே. அவருடைய பசங்கதான் முக்கியம். ராக் ஸ்டார் ரமணியம்மாள் என நான்தான் அவருக்கு பெயர் வைத்தேன். அதற்கு பாட்டி என்னிடம், எனக்கு பெயர் வைத்திருக்கிறாய், எனவே எனக்கு தாய் நீ என சொல்லாத மேடையே கிடையாது. என் குழந்தையை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு. சரிகமபவின் ராணி என்றால் அது ராக்ஸ்டார் ரமணியம்மாள்தான்.

ஆத்மா
அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்ளுங்கள். என்னிடம் கடந்த வெள்ளிக்கிழமைதான் பேசினார். எப்படியிருக்கே அர்ச்சனாம்மானு கேட்டாங்க. சிங்கப்பூரில் 12 பவுன்சர்களை வைத்து 67 வயது ராணி நடந்து போனதை யாராவது பார்த்திருக்கிறீர்களா, நான் பார்த்திருக்கிறேன், அது ராக்ஸ்டார் ரமணியம்மாள். ஆஸ்திரேலியாவில் சிட்னி முருகன் கோயிலில் கனீர் குரலில் பாடி கைதட்டல்களை பெற்றார். எப்போதுமே எதற்குமே ஆசைப்பட மாட்டார். அவரை போல வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும். உலக மக்கள் அனைவரும் நேரில் வரமுடியாவிட்டாலும் அவரவர் இருக்கும் இடத்திலேயே இருந்து கையெடுத்து கும்பிட்டு பிரார்த்தனை செய்தால் பாட்டியின் ஆத்மா சாந்தியடையும் என கண்ணீருடன் தெரிவித்தார் வி ஜே அர்ச்சனா.












Click it and Unblock the Notifications