படுத்தப்படுக்கையாகவே 2 ஆண்டுகள் உயிருடன் இருப்பார்னு சொன்ன மருத்துவர்கள்.. மனோபாலா மகன் கண்ணீர்
சென்னை: 2 ஆண்டுகள் உயிருடன் இருப்பார்னு மருத்துவர்கள் சொல்லிய இரு நாட்களில் நடிகர் மனோபாலா இறந்துவிட்டார் என அவருடைய மகன் ஹரீஷ் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா. இவர் பாரதிராஜாவின் உதவி இயக்குநர்களில் ஒருவராவார். இதுவரை மனோபாலா 36 படங்களை இயக்கியுள்ளார். 175 க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி ரோல், குணச்சித்திர வேடம் ஏற்று நடித்திருந்தார்.

இந்த நிலையில் மனோபாலாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
மனோபாலாவுக்கு ஹரீஷ் என்ற மகன் உள்ளார். அவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். மனோபாலாவுக்கு உடல்நிலை சரியில்லை என கூறியதை அடுத்து மனைவி, குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு அவர் மட்டும் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்தார்.
தந்தையுடன் இருந்து அவருடைய உடல் நலத்தை கவனித்துக் கொண்டார். இந்த நிலையில் நாளுக்கு நாள் மனோபாலாவின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் திடீரென கடந்த 3 ஆம் தேதி உயிரிழந்தார். மனோபாலா இறப்பு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எந்த விழாவாக இருந்தாலும் சரி, யார் இறப்பு சம்பவமாக இருந்தாலும் சரி அந்த இடத்திற்கு மனோபாலாதான் முதலில் செல்வார்.
நிறைய பேருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்தவர். கடவுள் பக்தி அதிகம் கொண்டவர். இவருக்கு ஷீரடி சாய்பாபா என்றால் மிகவும் பிடிக்கும். எந்த விஷயத்திற்கும் கோபப்படமாட்டார். ஆனால் அலுவலகத்தில் உள்ள சாய்பாபா சிலைக்கு தினமும் பூவைக்கவில்லை என்றால் கோபம் வந்துவிடும். ராதிகா உள்ளிட்டோருடன் நல்ல நட்பில் இருந்து வந்தார்.
அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் பேரழிப்பு. அவர் லியோ படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் அவர் இயற்கை எய்திவிட்டார். மனோபாலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும் அவரை நிறைய பேர் போய் சந்தித்தார்கள். நலம் விசாரித்தார்கள். ஆனால் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் தொற்று அதிகரித்துவிடும் என்பதால் மனோபாலாவை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாம்.
கடைசி காலத்தில் மனோபாலா மாதுளை பழச்சாறும், இளநீரை மட்டுமே குடித்திருக்கிறார். தண்ணீரை கூட குடித்துவிட்டு தொண்டையிலேயே ஒரு நிமிடம் வைத்திருந்துவிட்டு கஷ்டப்பட்டு விழுங்குவாராம். வீட்டில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட மனோபாலாவை அவ்வப்போது மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்தனராம். அப்போது மகனிடம் தந்தை 2 ஆண்டுகளுக்கு உயிருடன் இருப்பார்.

ஆனால் படுத்தப்படுக்கையாகவே இருப்பார். உணவு கொடுப்பது முதல் அனைத்துமே படுக்கையில்தான் இருக்கும் என கூறியிருந்தார்களாம். இது மனோபாலாவின் குடும்பத்தினருக்கு வேதனையாக இருந்தாலும் உயிருடன் இருப்பாரே என சற்று ஆறுதலாக இருந்ததாம். ஆனால் 2 ஆண்டுகள் உயிருடன் இருப்பார் என சொல்லிய அடுத்த 2 நாட்களில் மனோபாலா இறந்துவிட்டதாக அவருடைய மகன் ஹரீஷ் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மயில்சாமியின் இறப்புக்கு வந்த மனோபாலா கண்ணீர் விட்டார். என்னை விட்டு போய்விட்டாயே என அழுதார். அந்தளவுக்கு இருவரும் நண்பர்களாம். இதைத்தான் நடிகரும் இயக்குநருமான இளவரசு, மயில் அண்ணனை கேட்டதாக சொல்லுங்கள் என இரங்கற்பா வடித்திருந்தார். மயில்சாமியும் மனோபாலாவும் தங்களுக்கு இல்லாவிட்டாலும் தானம் செய்வதில் வல்லவர்கள் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications