6 மாசம் ஆயிடுச்சு.. இப்போதும் வரும் போன்.. மாரிமுத்து இறப்பிற்கு பிறகு குடும்ப நிலை! மனைவி உருக்கம்
சென்னை: நடிகராகவும், இயக்குனராகவும் பிரபலம் அடைந்த மாரிமுத்து கடந்த செப்டம்பர் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய இறப்பிற்கு பிறகு அவருடைய குடும்பத்தினர்கள் என்ன ஆனார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர்கள் ஒரு தனியார் சேனலில் தங்களுடைய தற்போதைய நிலைமை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.
நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்திருந்தாலும் அவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலத்தை கொடுத்தது. அந்த சீரியலில் ஆதி குணசேகராக நடித்தார் என்று சொல்வதை விடவும், வாழ்ந்து இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக மாறி இருந்தார்.

சமீபத்தில் அந்த சீரியலில் அவர் இல்லை என்பதால் ரசிகர்கள் அவரை ரொம்பவே மிஸ் பண்ணி வருகிறார்கள். அதே நேரத்தில் அவருடைய குடும்பத்தினரும் அவருடைய இறப்பிற்கு பிறகு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்களாம். அது குறித்து மாரிமுத்துவின் மனைவி மற்றும் மகன் ஒரு பேட்டியில் பேசி இருக்கின்றனர்.
அவர்கள் பேசுகையில், நாங்கள் அவருடைய இறப்பிற்கு பிறகு அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறோம். முழுமையாக நாங்கள் வந்துவிட்டோம் என்றெல்லாம் எங்களால் சொல்ல முடியாது. ஏனென்றால் எங்கள் குடும்பத்தின் ஆணிவேராக என் கணவர் தான் இருந்தார் என்று மாரிமுத்துவின் மனைவி கூறியிருக்கிறார்.
அதோடு அவர் மேலும் பேசுகையில் நாங்க சின்ன சின்ன பங்க்ஷனில் கலந்து கொள்ளும்போது கூட அவரைப் பற்றி எல்லோரும் பேசும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதோடு ஒரு வித வருத்தமும் ஏற்படுகிறது. ஆனாலும் அவர் எங்களை வழிநடத்திய விதம் எங்களுக்கு இன்று அவர் இல்லை என்ற கஷ்டத்தில் இருந்து வெளியே வருவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.
அவருடைய ரசிகர்கள் இப்போது நாங்கள் எங்கே போனாலும் எங்களை அடையாளம் கண்டு பாசமாக நலம் விசாரிக்கிறார்கள். அதுபோல ஈரோட்டில் இருந்து ஒரு ரசிகை ஒவ்வொரு வாரமும் எங்களுக்கு போன் செய்து விசாரித்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு அன்பை எல்லாம் நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அவர் இறந்த பிறகு அவருடைய போன் எங்களிடம் தான் இருக்கிறது. அதில் அவருடைய ரசிகர்கள் பலரும் எங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
அதுபோல அவர் ஆசைப்பட்டபடி நாங்கள் இன்னும் ரெண்டு மாதத்தில் எங்களுடைய புது வீட்டிற்கு போய்விடுவோம். அந்த வீட்டு வேலைகள் முடிவுக்கு வந்துவிட்டது. அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொன்னாரோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கிறோம். குடும்ப விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளும் போது அவர் பற்றி எல்லோரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
எனக்கு உறுதுணையாக இப்போது என்னுடைய மகனும் மகளும் இருக்கிறார்கள் என்று மாரிமுத்துவின் மனைவி பேசியிருக்கும் நிலையில் பலரும் மாரிமுத்துவின் மனைவிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications