மது போதையில் வாகனம் ஓட்டவில்லை எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா! போலீஸ் விளக்கம்
சென்னை: எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து வரும் மதுமிதா குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டிய போது மதுமிதா மது போதையில் இருந்தாரா என்பது பற்றி போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் மதுமிதா. இவர் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள கோயிலில் தன் நண்பரின் புது காருக்கு பூஜை போட்டுவிட்டு, வீட்டுக்கு திரும்பி இருக்கிறார்.

அப்போது வரும்போது காரை மதுமிதா தான் ஓட்டி வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ரவிக்குமார் என்கிற காவலர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த காவலர் ரவிக்குமாரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் நடிகை மதுமிதா வந்த காரை பறிமுதல் செய்து அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக நடிகை மதுமிதாவிடம் 4 மணிநேரம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் அவர் காரை வேகமாக ஓட்டி வந்ததால் தான் விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. கார் ஓட்டி வந்த நடிகை மதுமிதா மதுபோதையில் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின அதனை நடிகை மதுமிதா மறுத்தார்.
இந்த நிலையில், விசாரணை அதிகாரி திருமுருகன் என்பவர் அளித்த விளக்கத்தில் நடிகை மதுமிதா குடித்துவிட்டு கார் ஓட்டினார் என்கிற தகவல் உண்மையில்லை என்று கூறியுள்ளார். மதுமிதாவிடம் ஓட்டுநர் உரிமமும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் நடிகை மதுமிதா குடிபோதையில் வாகனம் ஓட்டவில்லை என்பது உறுதியாகி உள்ளது. எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கோர்ட், கேஸ் என்று சீரியல் எபிசோடுகள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கார் விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார் சின்னத்திரை நடிகை மதுமிதா.
சின்னத்திரை நடிகை மதுமிதா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால், அவர் கைது செய்யப்படுவாரா அல்லது அபராதம் விதிக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications