37 வயதில் திடீரென இறந்த சின்னத்திரை நடிகை.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது! கணவர் உருக்கம்
சென்னை: கன்னட சின்னத்திரை உலகை சோகத்தில் ஆழ்த்திய செய்தியாக, பிரபல நடிகை ரஷ்மி லீலா காலமானது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 37 வயதிலேயே வாழ்க்கைப் போராட்டத்தை முடித்துக் கொண்ட அவர், பல வருடங்களாக அமைதியாக ஒரு கடுமையான நோயுடன் போராடி வந்தது தெரியவந்துள்ளது.
சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக இருந்த ரஷ்மி லீலா, கன்னட தொலைக்காட்சி உலகில் தனது இயல்பான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர். குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட சீரியல்களில் அவர் நடித்த கேரக்டர்கள் மிகவும் இயல்பாக இருந்ததால், வீட்டில் ஒருவரைப் போலவே ரசிகர்கள் அவரை நேசித்தனர்.

சீரியல் நடிகை திடீர் இறப்பு
காவ்யாஞ்சலி, பாந்தவ்யா, ஆனந்த சாகர், ககனா குசுமா போன்ற சீரியல்கள் மூலம் அவர் வீடு தோறும் அறிமுகமானார். பல்வேறு கேரக்டரில் நடித்தாலும், எளிமையான பெண், அன்பான மனைவி, தியாகமான மருமகள் போன்ற வேடங்களில் அவருடைய நடிப்பு அதிகம் பேசப்பட்டது. சீரியல்களைத் தாண்டியும் பிராணா, கிராம தேவதை, சிஹி முத்து உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
திரை உலகில் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் 2019ஆம் ஆண்டு முதல் நுரையீரல் ஃபைப்ரோசிஸ் என்ற கடுமையான நோயுடன் போராடி வந்தார். தொடர்ந்து சிகிச்சை, மருந்துகள், மருத்துவமனை என கடந்த சில ஆண்டுகளாக அவரது வாழ்க்கையாக இருந்தது. உடல் சோர்ந்தாலும், மனம் மட்டும் தளரவில்லை என்று அவருடன் பணிபுரிந்தவர்கள் கூறுகின்றனர். "மீண்டும் செட்டுக்கு வருவேன்" என்ற நம்பிக்கையை அவர் கடைசி வரை விடவில்லை.
நடிகை ரஷ்மி லீலா கணவர் உருக்கம்
அவரது கணவர் சரிக்கு மஞ்சு, கன்னட தொலைக்காட்சி உலகில் எழுத்தாளராக பணியாற்றி வருபவர். தன் மனைவியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு பலரையும் கண்கலங்க வைத்தது. நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், "இப்போ அவள் குணமடைவாள்" என்ற நம்பிக்கை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட சிக்கல்கள் நிலையை மோசமாக்கி, இறுதியில் உயிர் பிரிந்தது.
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை
ரஷ்மி லீலாவின் மறைவு சின்னத்திரை உலகிற்கு ஒரு பெரிய இழப்பு. அவருடன் நடித்த சக நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள். "எப்போதும் சிரித்த முகம்... எதையும் அமைதியாக தாங்கிக்கொள்ளும் மனசு..." என்றே அனைவரும் அவரை நினைவு கூறுகின்றனர்.
வாழ்க்கையில் பெரிய கனவுகளுடன், இன்னும் பல கேரக்டர்கள் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த ஒரு கலைஞரின் உயிர் இவ்வளவு சீக்கிரம் பிரிந்துவிட்டது ரசிகர்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. திரையில் பல குடும்பங்களை இணைத்துக் காட்டியவர், தனது குடும்பத்தையே கண்ணீரில் ஆழ்த்தி சென்றுவிட்டார் என்பது இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாகவே இருக்கிறது.

சினிமா வாய்ப்பு
சீரியலில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு சமீபத்தில் தான் திரைப்பட வாய்ப்புகள் கூட வர தொடங்கியது. ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நான் நடிப்பேன் என்று உறுதியாக அவர் நம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அவருடைய உயிர் இன்று இந்த உலகத்தை விட்டு பிரிந்திருக்கிறது.
ஒரு நடிகையாக மட்டுமல்ல - தைரியமாக நோயுடன் போராடிய ஒரு பெண்ணாகவும் ரஷ்மி லீலா நினைவில் நிற்பார். அவர் நடித்த கதாபாத்திரங்கள் போலவே, அவர் வாழ்க்கையும் அமைதியான போராட்டம் தான். அந்த போராட்டம் இப்போது முடிந்திருக்கலாம்... ஆனால் அவர் விட்டுச் சென்ற சிரிப்பு, அவர் அளித்த மோட்டிவேஷன் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும் என்று பலரும் அவருக்கு தங்களுடைய வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications