தேவா அண்ணனுக்கு நாங்க முதுகெலும்பாய் இருந்தோம்! 10 ரூபாய் சம்பளம்! மறைந்த சபேஷ், கடைசி பேட்டியில் உருக்கம்
சென்னை: தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் தேவாவின் வெற்றிகளுக்குப் பின்னால், அவருடைய சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் மகத்தானது. இந்நிலையில், இசையமைப்பாளரும், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான எம்.சி. சபேசன் (சபேஷ்) இன்று (அக்டோபர் 23 மதியம் 12.15 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68.
சபேஷின் மறைவுச் செய்தி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது, அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தபோது, தனது சகோதரர்களுடன் இணைந்துப் பணியாற்றிய விதம் குறித்துப் பேசிய நெகிழ்ச்சியான தகவல்களுடன் சேர்ந்து, இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

90ஸ்களில் ஓர் இசை சாம்ராஜ்யம்
தேவாவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து சபேஷ் அளித்த பேட்டியில், அவர்களின் ஆரம்பக் கால இசைப் பயணம் முதல் உச்சக்கட்ட வெற்றி வரை பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.10 ரூபாய் சம்பளத்தில் இருந்து நாடகங்களுக்கு இசைப்பணி ஆற்றியிருக்கிறோம். தொடக்கத்தில் தேவா அண்ணனுக்கு நிறைய வாய்ப்புகள் வரும், ஆனால் கைகூடாது. ஐந்து படங்களுக்கு மேல் வேலை செய்து விட்டுப் பணம் தர ஆளில்லை. அப்போது இசைக்கலைஞர்கள் எங்களைத் திட்டிட்டு போவாங்க" என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.
சகோதரர்களின் பங்கு
"அண்ணனுக்கு நாங்க முதுகெலும்பாக இருந்திருக்கிறோம். 1983ல் கீ போர்டு ப்ளேயரா சினிமாவில் வந்தாராம். முரளி, ராஜா சாரிடம் 10 ஆண்டுகளாகக் கீ போர்டு ப்ளேயராகப் பணியாற்றியிருந்தார்".
ரஜினி, கமல் படங்களில் பின்னணி
தேவாவின் ஹிட் படங்களின் பின்னணிப் பணியில் சபேஷின் உழைப்பு குறிப்பிடத்தக்கது. அதிலும் அண்ணாமலை, அருணாச்சலம், பாட்ஷா ஆகிய மூன்று ரஜினி படங்களுக்கும் தான் பின்னணி இசைப் பணிகளை மேற்கொண்டதாகச் சபேஷ் பெருமையுடன் கூறியுள்ளார். "இன்றும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி சாருக்கு ஒரு இசை வருகிறது. அதை நான் தான் பண்ணேன். ஜேம்ஸ் பாண்ட் பாணியில் அதை அண்ணாமலை படத்தில் பண்ணோம்".
இரட்டை உழைப்பு
வாலி, குஷி, ஆசை மாதிரி படங்களை முரளி பண்ணுவார். "மூன்று ஆண்டுகள், அண்ணனுடன் டபுள் ஷிஃப்ட் வேலை பார்த்தோம். வருசத்துக்கு 23 படம் வரை பண்ணிட்டு இருந்தோம். அவ்வளவு பிஸி என்று பேசி இருந்தார். சபேஷ் தனது சகோதரர் முரளி உடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
"ஆயிரம் பொய் சொல்லி என்கிற படம் தான் இசையமைப்பாளராக என்னுடைய முதல் படம். பாடல்கள் வெளியாகி ஐரோப்பாவில் பெரிய ஹிட். அதுக்கு அப்புறம் தான் ரவிக்குமார் வந்து எங்களிடம் கேட்டார். நானும் முரளியும் சேர்ந்து சமுத்திரம் படம் முதலில் பண்ணோம்" என்று தனது வெற்றிப் பயணத்தைப் பற்றி சபேஷ் கூறியிருக்கிறார்.
கண்ணீருடன் இறுதி சடங்குகள்
காலமான சபேஷுக்கு மனைவி தாரா முன்னரே காலமானது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கீதா, அர்ச்சனா எனும் மகள்களும், கார்த்திக் எனும் மகனும் உள்ளனர். சபேஷின் இறுதிச் சடங்குகள் அவருடைய இல்லமான எண், 18வது தெரு, சவுத்ரி நகர், வளசரவாக்கம், சென்னை என்ற முகவரியில் நாளை (அக்டோபர் 24) மாலை 3 மணிக்கு நடைபெற்று, பின்னர் அவரது உடல் பிருந்தாவனம் நகர் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும்.
தேவாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, இசையுலகின் இந்த இழப்பைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications