துர்காவுக்கு பைபை சொல்லிட்டாரே நீலிமா...என்னாச்சு?
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் துர்காவாக நடித்து வந்த நடிகை நீலிமா சீரியலில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நீலிமா சின்னத்திரையில் மெட்டி ஒலி சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். வெள்ளித் திரையிலும் இவர் அவ்வப்போது நடித்து வருகிறார். என்றாலும் இவருக்கு புகழ் வாங்கித் தந்தது என்னவோ சின்னத் திரைதான்.
தாமரை, செல்லமே,வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்து வந்த இவர் ராதிகாவின் ரடான் தயாரிப்பு சீரியல்களில் நடித்து, ரடானின் ஆஸ்தான நடிகை என்று புகழப்பெற்றவர்.
அரண்மனை கிளி வில்லி
விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக விஜய் டிவி ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நீலிமா துர்கா என்ற கதா பாத்திரத்தில் வில்லியாக நடித்து வந்தார். அந்த சீரியலில் விதம் விதமான புடவைகள். புடவைகளுக்குத் தகுந்த அக்ஸசரீஸ் என்று கலக்கி வந்தவர் நீலிமா.
நீலிமா ராணி
தயாரிப்பாளர், நடிகை என்று தெரிந்த துறைகளில் தடம் பதித்து இருக்கும் நீலிமா, குழந்தை நட்சத்திரமாக வெள்ளித் திரைக்கு அறிமுகம் ஆனவர். கேமிராவின் முன் நிற்கும் ஒவ்வொரு தருணமும் எனக்கு மகிழ்ச்சி வாய்ந்ததாகத்தான் இருந்து இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இவரின் முழுப் பெயர் நீலிமா ராணி. அரண்மனை கிளி சீரியலில் இருந்து தான் விலக வேண்டிய தருணம் இது என்றும் கூறி இருக்கார்.
காரணம் சொல்லவில்லை
அரண்மனை கிளி சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கும் நீலிமா ராணி என்ன காரணம் என்று சொல்லவில்லை. என்றாலும் அவ்வப்போது சித்தி 2 சீரியல் பார்த்துவிட்டு, அதில் வில்லியாக நடித்து வரும் நிகிலாவின் நடிப்பை இன்ஸ்டாவில் பாராட்டி இருக்கார்.
சித்தி 2 அழைப்போ?
ஒரு வேளை நீலிமாவுக்கு சித்தி 2 சீரியலில் நடிக்க அழைப்பு வந்து இருக்குமோ என்கிற பேச்சும் அடிபடுகிறது. ராதிகாவின் செல்லமே சீரியலில் ஆரம்பித்து வாணி ராணி வரை நடித்து இருக்கிறார். அத்தோடு ரடான் தயாரிப்பு சீரியலான தாமரை சீரியலிலும் நடித்து இருக்கார். இதனால் இவருக்கு ரடானில் இருந்து அழைப்பு வந்து இருக்கலாமோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.