Neeya Naana: தெரு நாய் தான் உங்களுக்கு பெருசா? குழந்தைகள் உசுரு அலட்சியமா? நீயா நானாவில் வெடித்த பிரச்சனை
சென்னை: சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து விவாதிக்கும் விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி 'நீயா நானா'. இந்த வாரம் தெரு நாய்களைப் பாதுகாப்பது சரிதானா? அல்லது அது தேவையற்றதா? என்ற விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம், உணர்வுபூர்வமான கருத்துகளாலும், கடுமையான வாதங்களாலும் நிகழ்ச்சி பார்ப்பவர்களைச் சிந்திக்க வைத்தது.

பாசத்தால் வளர்க்கப்படும் தெரு நாய்கள்
சீரியல் நடிகை அம்மு, "நான் நாய்களை என்னுடைய குழந்தைகள் போல வளர்த்து வருகிறேன்" என்று கூறினார். மேலும், விலங்குகள் மீது நாம் காட்டும் அன்பு, மனித நேயத்தின் ஒரு பகுதி என்றும் அவர் வாதிட்டார். தெரு நாய்களுக்கு அடைக்கலம் கொடுப்பது, உணவளிப்பது என அவர் செய்தது, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
துயரம் நிறைந்த இன்னொரு பக்கம்
அம்முவின் கருத்துக்கு எதிர் தரப்பில் இருந்த ஒரு நபர், "குழந்தைகள் என்று நாய்களைச் சொல்லாதீர்கள். இது அனுதாபம் தேடும் ஒரு முயற்சி" என்று கடுமையாகக் கூறினார். மேலும், "நாய்கள் என்னுடைய குழந்தைகள், மாமன், மச்சான் என்று உறவுமுறைகளைச் சொல்லிக்கொண்டு வர வேண்டாம்" என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.
குழந்தைகளின் வலி
தெரு நாய்களால் பாதிக்கப்பட்ட பல பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் துயரங்களை மேடையில் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர். "விளையாடிக் கொண்டிருந்த என் குழந்தையைத் தெரு நாய் கடித்துவிட்டது. அதன் பிறகு என் குழந்தை அனுபவித்த வலி சொல்லி மாளாது" என்று ஒருவர் உருக்கமுடன் கூறினார். தெரு நாய்களின் கடி, சிறு குழந்தைகளுக்கு பெரிய காயங்களையும், உயிரிழப்புக்களையும் கூட ஏற்படுத்தக்கூடும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
தந்தையின் கண்ணீர்
அதுபோல இந்த நிகழ்ச்சிக்காக வெளியான இன்னொரு ப்ரோமோவில் ஒரு நபர் கதறி அழுதது பார்ப்போரையும் கண்கலங்க வைத்தது. அதாவது அந்த நபர் தன்னுடைய மகனை ஸ்கூலுக்கு விடுவதற்காக பைக்கில் சென்று இருக்கிறார். அப்போது ஒரு நாய் திடீரென பைக்கை நோக்கி வந்துவிட அதனால் பயந்து போன அந்த நபர் பைக்கை திருப்பும் போது அங்கு வந்த ஆட்டோவில் மோதி தன்னுடைய கண் முன்பே தன்னுடைய மகனின் தலைநசுங்கி இறந்து விட்டான் என்று சொல்லி இருந்தார். அதைக் கேட்டு கோபிநாத் உட்பட அங்கிருந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கோபிநாத்தின் கேள்வி
இந்த விவாதத்தின் நடுவே, தொகுப்பாளர் கோபிநாத் இரு தரப்புக்கும் இடையிலான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகக் ஒரு கேள்வியைக் கேட்டார். நாய்களுக்காகப் போராடுபவர்களிடம், "ஏதோ ஒரு நாய்க்காக அனுதாபப்படும் நீங்கள், என்னுடைய சொந்த பிள்ளைக்காக நான் போராடுவதைத் தவறு என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.
இந்தக் கேள்வி, விவாதத்தின் மையக்கருத்தை வெளிப்படுத்தியது. தெரு நாய்கள் மீது அன்பு செலுத்துவதும், அவற்றைப் பாதுகாப்பதும் மனிதாபிமானத்தின் ஒரு பகுதி. ஆனால், அந்தப் பாதுகாப்பு மனிதர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்போது, அதை எப்படி அணுகுவது என்பது ஒரு முக்கியமான கேள்வி.
இந்த விவாதம், தெரு நாய்கள் ஒரு புறம் அன்புக்குரிய உயிரினங்களாகவும், இன்னொரு புறம் பொதுமக்களுக்குப் பெரும் ஆபத்தாகவும் இருக்கும் சமூகப் பிரச்சனையை உணர்வுபூர்வமாகக் காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications