போக்சோ வழக்கில் முதல் கணவர்.. இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு மறுமணம்! மாப்பிள்ளை யார்?
சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவருக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது.
ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அன்னியன், ஜீன்ஸ், எந்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் ஷங்கர். இவரது படப்பிடிப்புகளில் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்படும். இதனால் அவர் பிரம்மாண்ட இயக்குநர் என்றே அழைக்கப்படுகிறது.

இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும் விருமன் பட நடிகை அதிதி ஷங்கர், ஐஸ்வர்யா உள்பட 3 பிள்ளைகள் உள்ளனர். மகள்கள் ஐஸ்வர்யா, அதிதி இருவருமே மருத்துவர்கள், அர்ஜித் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் வீரரான ரோஹித்தை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர்.
இவர்களுடைய திருமணம் மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் படு அமர்க்களமாக நடத்தப்பட்டது. இவர்களுடைய திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண வாழ்க்கை சிறிது மாதங்களில் கசந்து போனது.
காரணம் புதுமாப்பிள்ளை ரோகித் மீதான குற்றச்சாட்டு ஐஸ்வர்யாவின் வாழ்க்கையையே புரட்டி போட்டது. அதாவது புதுவை துத்திப்பட்டில் புதுவை கிரிக்கெட் கிளப் உள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தையும் நீர் நிலைகளையும் ஆக்கிமிரத்து மைதானம் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த மைதானம் சீல் வைக்கப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது.
மைதானம் மூடப்பட்ட போது முத்திரைப்பாளையம் இளங்கோ அடிகள் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அப்போது பயிற்சியாளர் தாமரைக் கண்ணன் என்பவர் 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து அச்சிறுமி கிரிக்கெட் கிளப் நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர்களோ தாமரைக்கண்ணனை அட்ஜெஸ்ட் செய்து கொள் என கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பாலியல் தொல்லை தாங்க முடியாத நிலையில் அந்த சிறுமி குழந்தைகள் நல மையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பாலியல் சீண்டல் தொடர்பாக தாமரைக்கண்ணன் மீது பாலியல் சீண்டல் சட்டத்திலும் மற்றொரு பயிற்சியாளர் ஜெயக்குமார், கிரிக்கெட் கிளப் கேப்டன் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் கிளப் கேப்டன் தாமோதரனின் மகனான ரோகித் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழும் போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
ரோகித் மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ஆவார். தலைமறைவாக இருந்த ரோகித்தை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் ரோகித் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தம்பதிகளுக்குள் மனம் ஒத்து போகவில்லை. தொடர்ந்து இருவருக்கும் இடையே பிரச்சினை வந்தது.
இதனால் திருமணமான 6 மாதங்களிலேயே ஐஸ்வர்யா தனது கணவரை விட்டு பிரிந்தார். சட்டபடி விவாகரத்து கோரினார். பின்னர் தனது தந்தை வீட்டில் இருந்தார். மகளின் விவாகரத்து விவகாரம் வெளியே தெரிந்த நிலையிலும் அதுகுறித்து ஷங்கர் எதையும் கூறாமல் அமைதி காத்தார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடத்த முடிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதை ஷங்கரின் இரண்டாவது மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் உறுதிப்படுத்தினார். அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தனது அக்கா ஐஸ்வர்யாவுக்கு நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மாப்பிள்ளை பெயர் தருண் கார்த்திகேயன். இவர் உதவி இயக்குநர். இவர் பின்னணி பாடகரும் கூட! இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications