Roja Serial: கொரோனாவுக்கு மத்தியிலும் ரோஜா தொடர்ந்து மணம் வீசுதே!
சென்னை: கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுன் அமலில் இருக்கும் நேரத்தில் விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஷூட்டிங் செய்ய முடியவில்லை...அனைவரின் பாதுகாப்பும் அவசியம் என்று வெளிப்படையாக சொல்லி நடப்பு சீரியல்கள் ஒளிபரப்பு இல்லை என்று அறிவித்து விட்டார்கள்.
அதன்படி விஜய், ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் முந்தைய சீரியல்கள் மறு ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகின்றன.சன் தொலைக்காட்சியிலும் சில சீரியல்கள் அறிவிப்பு செய்தும், சில சீரியல்கள் அறிவிப்பு செய்யாமலும் ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டன.
சன் டிவியின் தமிழ்ச்செல்வி, சந்திரலேகா, ரோஜா, அழகு போன்ற சீரியகள் எதுவுமே சொல்லாமல் ஒளிபரப்பிய காட்சிகளோடு, ஒரு சில புது காட்சிகளை வைத்து எபிசோட் கணக்கை ஒப்பேற்றி இன்றுவரை ஒளிபரப்பாகி வருகின்றன.
வெளிப்படைத் தன்மை இல்லை
சன் டிவியின் தமிழ்ச்செல்வி, சந்திரலேகா, அழகு, ரோஜா, கண்மணி சீரியல்களில் ஒரு சில காட்சிகள் என்று மட்டும் வைத்துக்கொண்டு, மீதியை ஃபிளாஷ்பேக் என்று காண்பித்து ஒரு எபிசோடாக்கி ஒப்பேற்றி ஒளிபரப்பு செய்துவிடலாம் என்று கணக்கில் வைத்து, அதன்படி செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால் லாக்டவுன்..படப்பிடிப்பு இல்லை என்று தெரிந்து இருக்கும் மக்களை இப்படி ஏமாற்றும் போக்கு எதற்காக?
ரோஜா சந்திரலேகா
இதில் ரோஜா சீரியலில் ஒளிபரப்பாகிய காட்சிகளையே மீண்டும் மீண்டும் என்று ஒளிபரப்பி, இது புது எபிசோட்தான் என்று மீண்டும் மீண்டும் மக்கள் மீது திணிக்கும் முயற்சியே நடக்கிறது. சந்திரலேகா சீரியலும் அப்படித்தான் இருக்கிறது.அழகு சீரியலிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
அழகு ரேவதி
அழகு சீரியலில் அழகம்மையாக நடித்து வரும் ரேவதி நல்ல நாளில் காட்சிகளில் வரவே மாட்டார். மொத்த கால்ஷீட் கொடுத்துவிட்டார் போலும்.. அவரை வைத்து எடுத்த காட்சிகளை வைத்து அழகு சீரியலை புத்தம் புது எபிசோட் என்பது போல எடிட் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள்.
வெள்ளி வரை இழுவை
எப்படியாவது இந்த வெள்ளி கிழமை வரை சீரியல்களை இழுத்து முடித்துக் கொள்ளலாம் என்று சீரியல் தயாரிப்பாளர் நினைத்து இருக்கக் கூடும். ஆனால், இப்படி வெளிப்படைத் தன்மை இல்லாமல் காட்சிகளை வெட்டி ஒட்டி ஒளிபரப்பி. இதில் வரும் வருவாய்..இந்த சீரியலின் கடைநிலை ஊழியருக்கும் சென்று சேருமா?