தண்ணியில தண்ணி கலந்து... இதுவும் அண்ணியார் செய்த சதி!
சென்னை: குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர் என்று திருவிளையாடல் படத்தில் ஒரு வசனம் வரும். அது போல அதில் இதில் குறை கண்டுபிடித்து, சமூக வலைத் தளங்களில் புகழ் அடைந்து வருபவர்கள், அதன் மூலம் வருவாய் எடுத்து வருபவர்கள் இன்று பெருகிவிட்டனர்.
முகநூல், யூடியூப் சேனல்களில் இப்படி பிரபலம் அடைந்து வருபவர்கள் நிறைய பேர் என்று இன்று பல்கிப் பெருகி வருகின்றனர். இவர்கள் சீரியல், சினிமா அரசியல் என்று எதையும் விட்டு வைப்பதில்லை.
அராத்தி யூடியூப் சேனல் சீரியல் vs ரியாலிட்டி என்று ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளது. இதில் காலையில் எழுவதில் இருந்து சீரியலில் என்னென்ன நடக்கிறது என்பதை ஜாலியாக கலாய்த்து இருக்கிறார்கள்.
எழும்போதே மேக் அப்
காலையில் எழும்போதே பொம்மை போல மேக்கப் கலையாமல் படுத்து எழுந்திருக்கும் ஹீரோயின். அம்மா காபி குடும்மா என்று ரியாலிட்டியில் கொட்டாவி விட்டுக்கொண்டே கேட்கும் ரியாலிட்டி பெண் என்று ஆரம்பித்து இருக்கிறார்கள்.இவர்கள் ராஜா ராணி சீரியலில் ஆரம்பித்து செம்பருத்தி சீரியல் வந்து,தெய்வ மகள் சீரியல் வழியாக லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்து முடித்து இருக்கிறார்கள்.
பெண் சிந்திக்கையில்
ஹீரோயின் சிந்திக்கும் போதே.. இவளா இருக்குமோ ,அவளா இருக்குமோ..இப்படித்தான் இருக்கும்.ஏன் அப்படி இருக்க கூடாது. ம்ம்ம்.. அவளை சும்மா விட மாட்டேன்.என்று வாய்விட்டு பேசி சிந்திப்பது.. ரியாலிட்டியில் பெண்,சும்மா உட்கார்ந்து சிந்தித்து அப்படியே தூங்கி விடுவது என்று காண்பித்து இருக்கிறார்கள்.
இப்படியா அண்ணியார்
அண்ணனிடம் தம்பி டூர் போக காசு கேட்கிறான் எத்தனை அரியர் வச்சிருக்கேன்னு அண்ணன் கேட்க தம்பி ஆறு என்கிறான். முதலில் அரியர் எழுதி பாஸ் பண்ணு அப்புறம் பார்க்கலாம்னு சொல்ல, அண்ணி வந்து பணம் கொடுத்து,நீ போயிட்டு வா தம்பின்னு சொல்றது ரியாலிட்டி. சீரியலில், தண்ணி குடிக்க போனவன் என்னது தண்ணியில இவ்ளோ தண்ணி கலந்து இருக்காங்க. நிச்சயம் இது அண்ணியார் வேலையாத்தான் இருக்கும்னு இவன் சொல்லிக்கறான்.என்னால மட்டும்தாண்டா தண்ணியில தண்ணி கலக்க முடியும்னு அண்ணியார் மறைஞ்சு நின்னு சொல்லிக்கறாங்க. இப்படி அண்ணியார் என்று பல குறைகள்.
காபி அத்தே
அத்தே காபி குடிக்காம கிளம்பிட்டீங்கன்னு மருமகள் கேட்க, இந்த அகிலாண்ட பிரம்ம கோடி பரமேஸ்வரி .பராசக்தி கோயிலுக்கு போயிட்டு, அப்படியே வர்ற வழியில லட்சுமி ஸ்டோர்ஸை வாங்கிட்டு வரப்போறேண்டின்னு கிளம்பறாங்க. இப்படி சீரியலில் நடக்கும் பல விஷயங்களை காமெடியாக்கி இந்த யூடியூப் அராத்தி சேனலில் ஒற்றைப் பெண்ணாக நடித்து கலாய்த்து இருப்பது நகைச்சுவையாக இருக்கிறது.
இன்றைய சீரியல்கள் வரிசை கட்டி நின்று நமது நேரத்தை எப்படி விழுங்குகிறது என்பதை கண்கூடாக பார்த்து நொந்து கொள்ளலாம்.