1 வாரத்திற்கு என்னை பார்க்க யாரும் வராதீர்கள்! மருத்துவமனையில் இப்படியா செய்வது? ஷிஹான் ஹுசைனி கோபம்
சென்னை: ஒரு வாரத்திற்கு என்னை பார்க்க யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என வில்வித்தை வீரரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தீர்த்தங்களை கொண்டு வந்து என் வாயில் ஊற்றுகிறார்கள் என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷிஹான் ஹுசைனி கூறியிருப்பதாவது: எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுங்கள். ஒரு வாரத்திற்கு என்னை பார்க்க யாரும் வர வேண்டாம். காம்னா மற்றும் மஹிமா ஆகிய இருவர் என்னை பார்க்க வெங்கடேஸ்வரா மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

அவர்களுக்கு என்னை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் பாதுகாப்பு காவலர்களுடன் வாக்குவாதம் செய்து அவர்களை வசைப்பாடியுள்ளனர். இது எனக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருநீர், குங்குமம் கொண்டு வருவது, தர்காவில் இருந்து தீர்த்தம் வாங்கி வருவது, அதை என் வாயில் ஊற்றுவது, நான் ஏதோ அடுத்த நிமிடமே இறந்துவிடுவது போல் எண்ணி பிரார்த்தனைகளை அறையிலேயே செய்வது... என் நெற்றியில் விபூதி, குங்குமத்தை வைப்பது, என்னுடன் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது என தொடர்ந்து நடக்கிறது.
நான் எப்போது இறக்க வேண்டும் என்பதை கடவுள் முடிவு செய்யும் வரை நான் இறக்க மாட்டேன் என்பதுதான் உண்மை. நான் புற்றுநோயை எதிர்த்து போராடி வருகிறேன். உங்கள் சமூகவலைதள பக்கத்தில் வருவதற்காக அல்ல!

யாரெல்லாம் என்னை விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் அமைதியாக பிரார்த்தனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களும் தயவு செய்து அமைதியாக செய்யுங்கள். நோயுடன் போராட என்னை தனியாக விடுங்க என ஹுசைனி கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. இவர் கராத்தே மாஸ்டர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கே பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில்தான் அறிமுகமானார். இவர் வில்வித்தை வீரரும் கூட! இவருக்கு ரத்த புற்றுநோயிலேயே அரிய வகை ரத்த புற்றுநோய் ஏற்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
தனக்கு தினந்தோறும் 2 பாட்டில் ரத்தம் ஏற்றினால்தான் உயிருடன் இருக்க முடியும் என்றும் மருத்துவர்களும் உயிர் பிழைக்க வைக்க வாய்ப்பில்லை என சொல்லிவிட்டதாகவும் ஹுசைனி தெரிவித்திருந்தார். எனினும் தான் தைரியமாக இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
வெள்ளை அணுக்கள் (white blood cells) 4000 ஆக இருந்த நிலையில் தற்போது பூஜ்ஜியமாகிவிட்டது. இதனால் ஹுசைனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குளிர் காய்ச்சல் மற்றும் உடல் அரிப்பால் அவர் அவதிப்பட்டு வருகிறார். இந்த வெள்ளை அணுக்கள்தான் நோயை எதிர்த்து போராடும். ஆனால் அவையே இல்லாத போது நோயை எதிர்த்து போராடும் திறனும் குறைந்துவிடுகிறது. தான் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் ஹுசைனி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications