அப்பாவுக்கு ‘பிக் பாஸ்’.. மகளுக்கு ‘ஹலோ சகோ’... டிவி தொகுப்பாளினி ஆகும் ஸ்ருதி!
சின்னத்திரை தொகுப்பாளினி ஆகி இருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
சென்னை: நடிகை ஸ்ருதிஹாசன் சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராகி இருக்கிறார்.
சமீபகாலமாக வெள்ளித்திரை முன்னணி நடிகர்கள் பலர் சின்னத்திரைக்கு படையெடுத்து வருகின்றனர். நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல், விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன்1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் விஷால், சன் டிவியில் 'நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவரைப் போலவே ஜெயா டிவியில் வரலட்சுமியும், ஜீ தமிழில் இயக்குநர் கரு.பழனியப்பனும் புதிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராகி இருக்கின்றனர்.

சின்னத்திரையில் ஸ்ருதி:
இந்த சூழ்நிலையில், கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகி இருக்கிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். இதன் ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
எதிர்பார்ப்பு:
இதன் முதல் நிகழ்ச்சியில் வரவுள்ள பிரபலம் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஸ்ருதி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் கலர்புல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொகுப்பாளர்:
தற்போது இந்தி படமொன்றில் மட்டுமே ஸ்ருதி நடித்து வருகிறார். தமிழில் புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. சமீபகாலமாக காதலருடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் தான் புதிய பட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி இருக்கிறார் ஸ்ருதி.

இது தான் காரணம்:
சினிமாவில் ஒரு படத்தில் நடிப்பதைவிட, சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது பத்து திரைப்படங்களில் நடித்ததற்கு சமம் என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியில் திரும்பத் திரும்பக் கூறி வந்தார் நடிகர் கமல். எனவே தான் சமீபகாலமாக சினிமா கலைஞர்களின் கவனம் சின்னத்திரை பக்கம் திரும்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications