Eleven த்ரில்லர் திரைப்படம்! தக் லைஃப்புக்கு பெட்டர்தான்! ஆனாலும் ஒரு லாஜிக் வேண்டாமா?
சென்னை: 'எலெவன்' என்ற த்ரில்லர் திரைப்படத்தில் ஏகப்பட்ட லாஜிக்கல் ஓட்டைகள் (logical loopholes) உள்ளன. குறிப்பாக, இரட்டையர்களில் ஒருவரைக் கொலையாளி குறிவைத்து கொல்வது என்பது புரியாத புதிராக உள்ளது. அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்களில், யார் தவறிழைத்தவர் என்பதை அந்தக் கொலையாளி எப்படி அடையாளம் கண்டுகொண்டார் என்பது விளக்கப்படவில்லை.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: "லெவன்" என்றொரு திரைப்படம் பார்த்தேன். அதில் நாயகன் ஒரு காவல் அதிகாரி. விசாரணைக்காக அபிராமியிடம் செல்கிறார். அபிராமி தனது கடந்த காலக் கதையை ஃப்ளாஷ்பேக் (Flashback) ஆகச் சொல்கிறார்.

இந்த ஃப்ளாஷ்பேக் குறித்து எனக்குப் பல கேள்விகள் உண்டு. ஒருவர் தன் கதையையோ, நிகழ்வுகளையோ சொல்லும்போது, தன் கண்முன்னால் நடந்த சம்பவங்களையோ அல்லது தான் கேட்டறிந்த விஷயங்களையோதானே சொல்ல முடியும்?
'தீவார்' (தமிழில் 'தீ') என்றொரு படம். படம் தொடங்கியதும், அமிதாப்பின் அம்மா (தமிழில் சசிகபூர்) காவல்துறை விருது வாங்கியதும் நினைத்துப் பார்க்கிறார். அப்போது ஃப்ளாஷ்பேக்கில் அமிதாப்-பர்வீன் பாபி காதல், சசிகபூர்-அமிதாப் பேசிக்கொண்ட காட்சிகள் எல்லாம் வருகின்றன. இதெல்லாம் நினைத்துப் பார்க்கும் அம்மாவுக்கு எப்படித் தெரியும்?
'எலெவன்' படத்தில் அபிராமி தன் பள்ளியில் நிகழ்ந்த சம்பவங்களைச் சொல்கிறார். தன் கணவனிடம் அபிராமி "போலீஸைக் கூப்பிடுங்கள்..." என்கிறார். கணவர் "போலீஸ் வந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும்" என்கிறார். இதுவரையிலான உரையாடல் அபிராமிக்குத் தெரியும். ஆனால், இவர்கள் பேசுவதை ஒரு சிறுவன் (பெஞ்சமின்) ஒட்டுக்கேட்கிறார். இந்தச் சம்பவம் அபிராமிக்கு எப்படித் தெரியும்? அதை எப்படி அபிராமியால் சொல்ல முடியும்?
காலம்காலமாக கதாசிரியர்கள் 'ஜல்லியடிக்கும்' காட்சிதான் இந்த ஃப்ளாஷ்பேக்.
'எலெவன்' படத்தின் பிற குறைகள்
இப்படத்தில் மற்றொரு குறை என்னவென்றால், கொலையாளி இரட்டையர்களில் தவறு செய்த ஒருவரைக் கொல்கிறார். ஆனால், தவறு செய்தவர், தவறு செய்யாதவர் என அச்சில் வார்த்தது போல் இருக்கும் இரட்டையர்களை அவர் எப்படி அடையாளம் கண்டார்? அதிலும், அவர் செய்யும் கொலைகளெல்லாம் இருட்டில்.
கொலையாளி தன் இரட்டை சகோதரனுக்காகப் பழிவாங்குகிறான். காவல்துறை பிடித்தாலும் பரவாயில்லை என்று க்ளைமாக்ஸில் சொல்கிறார்கள். அப்படியென்றால், கொலை செய்யப்பட்டவரின் அடையாளம் தெரியாமல் இருக்க உடலைத் தீ வைத்து எரிப்பது எதற்கு?
இக்குறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால், இது ஒரு நல்ல முயற்சிதான்! இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications