கங்குவா ஃபெயிலியர்! நடிகர் சூர்யாவுக்கு ரெட்ரோ கை கொடுக்குமா? வெற்றிக் கொடி பறக்குமா?
சூர்யா - தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடம் பிடித்த நடிகர். அவருடைய திரைப்பட வாழ்க்கையில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், சில முக்கிய படங்கள் மூலம் அவர் தமிழ் மக்களின் மனதில் நிலையான இடம் பிடித்துள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பாக 2011-ல் வெளியான ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு, ஒரு மாஸ் கமர்ஷியல் வெற்றி பெற்ற திரைப்படம் அவருக்கு வரவில்லை என்றே சொல்லலாம்.
சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டுகளை பெற்றன. இவை சூர்யாவின் நடிப்புத் திறமையை வெளிக் கொணர்ந்தும், சர்வதேச அளவிலும் கவனம் பெற்றும், ஓரளவுக்கு அவரது படங்களின் தரத்தை உயர்த்தின. ஆனால், இவை இரண்டும் ஓடிடியில் வெளியான படங்கள். இவற்றின் வெற்றி அப்படியே திரையரங்குகளில் கண்டறியக் கூடிய வசூல் வெற்றியாக மாறவில்லை.

அதன் பின் வந்த எதற்கும் துணிந்தவன் அல்லது சமீபத்தில் வெளியான கங்குவா போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவே இல்லை. விமர்சன ரீதியாகவும், ரசிகர்கள் ஆதரவு ரீதியாகவும் அந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையில், சூர்யாவின் அடுத்த படமான 'ரெட்ரோ' பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக அதிகம் உள்ளது. இந்த படம் அவரது சினிமா வாழ்க்கையில் மீண்டும் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையுமா என்ற கேள்வி அதிகமாகவே எழுகிறது. 'ரெட்ரோ' எனும் தலைப்பே ஒரு வித்தியாசமான சூழ்நிலையை உருவாக்குகிறது.
'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீண்டும் ஒரு மாஸ் மற்றும் தனித்துவமான சினிமாவை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதிலும், அவர் சூர்யாவை நாயகனாக வைத்து இயக்கும் புதிய படம் 'ரெட்ரோ' என்பதனால், இந்தக் கூட்டணியிலேயே ஒரு வித அர்ப்பணிப்பு உள்ளது.
சூர்யா, சமீபகாலமாக கலை மற்றும் உள்ளடக்க ரீதியான படங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். ஆனால், ரசிகர்கள் இடையே ஒரு மாஸ் ரீஎன்ட்ரிக்காகவும், திரையரங்கத்தை அதிர வைக்கும் பாணியில் படம் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 'ரெட்ரோ' படம் அந்த ஆசையை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் வித்தியாசமான கதை சொல்லல், ஸ்டைலிஷான ஃப்ரேம்கள், இசை தேர்வுகள் மற்றும் கதையின் பின்புலத்தையும், சூர்யாவின் நடிப்பு ஆளுமையையும் சேர்த்தால், 'ரெட்ரோ' தமிழ் சினிமாவில் ஒரு புதிய சுவாசமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இந்த கூட்டணி வெற்றியடைந்தால், இது சூர்யாவுக்கான மீட்டெடுப்பு மட்டும் அல்ல, தமிழ் சினிமாவுக்கே ஒரு புதிய பாணியை முன்வைக்கும் படமாகும்.
சூர்யாவுக்கான இந்த படம் வெற்றி பெற்றால், அவர் மீண்டும் தமிழ் சினிமாவின் முன்னணியில் இடம் பிடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. 'ரெட்ரோ' என்பது வெறும் ஒரு படம் அல்ல, சூர்யாவின் கேரியருக்கே புதிய உயிர் ஊட்டும் முயற்சி என்றும் கூறலாம்.
இந்த முறையில் சூர்யா மீண்டும் வெற்றிக்கொடி பறக்க வைத்தால், அவர் ரசிகர்களின் நம்பிக்கைக்கு உரிய பதிலை அளித்ததாகவும், இன்னும் நிறையக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்ததாகவும் இருக்கும்.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications