Tamizha Tamizha: 4 இளைஞர்களால்.. என் மனைவிக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது! கலங்க வைக்கும் கணவரின் அழுகை
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் (Zee tamil Tamizha Tamizha) "தமிழா தமிழா" நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோடு பலரின் மனதையும் நொறுக்கிய ஒரு உண்மை கதையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. வாழ்க்கைத் துணையை இழந்த பிறகு அதிகம் கஷ்டப்படுவது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் நடந்த அந்த விவாதத்தில் கலந்து கொண்ட ஒரு கணவர் பகிர்ந்த அனுபவம், அங்கே இருந்தவர்களை மட்டும் அல்ல... இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த ஒவ்வொருவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.
அந்தக் கணவருக்கு, ஆரம்பத்திலிருந்தே போட்டோகிராபி மீது பேராசை. "ஒரு நல்ல கேமரா வாங்கி நான் பெரிய போட்டோகிராபராக ஆகணும்" என்ற கனவை அவர் தனது காதலியிடம் சொல்லியிருந்தாராம். அந்தப் பெண் அந்த ஆசையை சாதாரணமாக கேட்டு வைக்கவில்லை. தன்னிடம் இருந்த சேமிப்பு பணம் முழுவதையும் கொடுத்து, அவர் கனவுக்காக ஒரு கேமரா வாங்கிக் கொடுத்திருக்கிறார். "உன் ஆசைதான் எனக்கு முக்கியம்" என்று சொல்லி அந்த நபரின் சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

பிறகு இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. அதற்கு பிறகு சின்ன சின்ன சந்தோஷங்கள்... சேர்ந்து சாப்பிடுவது... சேர்ந்து வேலைக்கு போவது...சின்னதாக போட்டோ எடுக்க ஆரம்பித்து, பிறகு கல்யாணம் ஆர்டர் வரைக்கும் எடுத்து வாழ்க்கையை மெதுவாக முன்னேற்றியிருக்கிறார்கள்.
"இனி நம்ம வாழ்க்கை செட்டாகிடுச்சு... நிம்மதியா சந்தோஷமா வாழலாம்..." என்று அடுத்த கனவுகளுக்குப் போயிருந்த நேரம். அந்த ஒரு இரவு எல்லாவற்றையும் உடைத்துவிட்டது.
ஒரு நாள் அந்த நபரின் மனைவி, தன் தோழி வீட்டுக்கு போயிட்டு, ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, குடிபோதையில் வேகமாக வந்த கார் மோதியிருக்கிறது. நான்கு இளைஞர்கள் ஒரே ஒரு நொடியில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சிதைத்துவிட்டார்கள். மோதியதும் நிற்காமல் அங்கிருந்து ஓடி விட்டார்களாம்.
அவர் தூக்கி வீசப்பட்டு விழுந்து உடலில் முதுகெலும்பு உடைப்பு... கழுத்து, விலா எலும்பு முறிவு... கால்கள் சிதைவு... கிட்னி, கணையம் கிழிவு என உடம்பு முழுக்க காயம் ஏற்பட்டிருக்கிறது இவ்வளவு அடிபட்டு உடலில் இருந்த ரத்தம் எல்லாம் ஆறாக கீழே ஓடி இருக்கிறது பிறகு ரொம்ப நேரம் கழித்து தான் சிலர் பார்த்து அவரை ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள்.

பத்து நாட்கள் மருத்துவமனை
ஹாஸ்பிடலில் பத்து நாட்கள் இருந்திருக்கிறார். அந்த பத்து நாட்களிலும் மூன்று பெரிய அறுவை சிகிச்சைகள். ஒவ்வொரு முறையும் ஆபரேஷன் முடிந்து வெளியே வந்தபோது, "என்னால இந்த வலியை தாங்க முடியல... என்னை விட்டுடுங்க..." என்று கையை தூக்கி கணவரிடம் கும்பிட்டாராம். அந்த காட்சி இன்னும் கண் முன் இருந்து அகலவே இல்லை என்று அவர் அழுதார்.
ஒரு நாள், "இங்க சாப்பாடு சாப்பிட முடியல... எனக்கு வீட்டு பருப்பு சாதம் வேணும்..." என்று கேட்டிருக்கிறார். உடனே அவர் வீட்டில் போய் பருப்பு சாதம் செய்து எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பியிருக்கிறார். ஆனா பாதி வழியில் போயிட்டு இருக்கும்போதே ஒரு போன்... ஆதார் கார்டு எடுத்துக்கிட்டு சீக்கிரம் வாங்க..
அதற்குள் அந்த மனைவி இந்த உலகத்தை விட்டு போய்விட்டார். "அவருக்காக எடுத்துச் சென்ற சாப்பாடு கையில் இருந்துச்சு... ஆனா மனைவியோ இல்ல..." - அந்த ஒரு வரியில் அந்த மனிதரின் முழு வாழ்க்கை உடைந்து கிடந்தது.
அவர் அங்கே இன்னொரு விஷயம் சொன்னார், அது எல்லாரையும் மேலும் கலங்க வைத்தது.
"பெண்கள் தான் கணவனை இழந்த பிறகு அதிகம் கஷ்டப்படுவாங்கன்னு எனக்கு தெரியும்... ஏன்னா நான் சின்ன வயசுல அப்பாவை இழந்தவன்... எங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாங்கன்னு நான் பார்த்தவன்... இப்போ என் மனைவி போன பிறகு என் குடும்பம் என்னை தாங்கிக்கிட்டாங்க... இல்லனா நான் உயிரோட இருக்க மாட்டேன்..."
இன்று வரை அந்த விபத்து வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த நான்கு பேருக்கும் இன்னும் தண்டனை கிடைக்கவில்லை. ஒரு பெண் தனது காதலனின் கனவை நனவாக்க கேமரா வாங்கிக் கொடுத்தாள்... அதே கேமராவில் அவர்கள் சேர்ந்து எடுத்த வாழ்க்கை புகைப்படங்கள் இன்னும் இருக்கும்... ஆனா அந்த புகைப்படத்துக்குள் இருந்த பெண் மட்டும் இப்போது இல்லை.
நிகழ்ச்சியை பார்த்த ஒவ்வொருவரின் மனதிலும் ஒரே ஒரு வேண்டுதல் தான், "இப்படி யாருடைய வாழ்க்கையிலும் நடக்கக் கூடாது..." ஒரு நொடிக் குடிபோதையின் அலட்சியம், ஒரு முழு வாழ்க்கையை எப்படி சிதைக்கிறது என்பதை சொல்ல வார்த்தைகளே போதவில்லை.












Click it and Unblock the Notifications