100 வீடுகள் கட்ட 12 ஏக்கர் நிலம் இலவசம்; வயநாடு 1000 ஆயிரம் ஏக்கர் தொழிலதிபர் நன்கொடை
கேரளா: வயநாடு மலைப்பகுதியில் 1000 ஏக்கர் வைத்துள்ள தொழிலதிபர் பாபி செம்மனூர் நிலச்சரிவில் சிக்கி வீடு இழந்த மக்கள் 100 பேருக்கு வீடு கட்டிக் கொள்ள இலவசமாக 12 ஏக்கர் நிலம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி இறந்த 221 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது. இவை தவிர 166 உடல் பாகங்களும் கிடைத்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முண்டக்கை மற்றும் சூரல்மலா, அட்டமலா ஆகிய மூன்று பகுதிகளில் மொத்தம் 4,833 பேர் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரள மாநிலம் முண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 500 வீடுகள் அடித்துக் கொண்டு சென்று விட்டதாகவும் மீதி 40 வீடுகள் மட்டுமே தற்சமயம் எஞ்சி இருப்பதாகவும் நேரடி கள ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், வயநாடு மலைப் பகுதிகளான சூரல்மலா, முண்டக்கை, பூஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த 6 நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் 200க்கும் மேற்பட்டோர் நிலைமை என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை என்றும் ஊடகங்கள் கூறிவருகின்றன.
இந்நிலையில் பாபி செம்மனூர் என்பவர் வயநாடு நிலச்சரிவில் வீடு இழந்த 100 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொள்ள நிலத்தை இலவசமாகத் தர உள்ளதாக அறிவித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் பாபி செம்மனூர். இவர் ஒரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கேரளாவில் உள்ள வயநாட்டில் 1000 ஏக்கர் மலைப்பகுதியில் தேயிலைத் தோட்டம் வைத்துள்ளார். அதில் கூடவே இந்தியாவிலேயே பெரிய ரெஸ்ட்டாரண்ட் நடத்தி வருகிறார். மேலும் அங்கே பொதுப்போக்கு சார்ந்த விளையாட்டு தீம் பார்க் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது குடும்பம் தங்க வியாபாரம் செய்து வருகிறது.
கேரள மக்கள் மத்தியில் இவரது பெயர் தொழிலதிபர் என்பதைத் தாண்டி வேறு பல சமூக சேவைகள் மூலம் கேரள மக்களைப் போய் அடைந்துள்ளது. மேலும் பாபி ஒரு ஆடம்பர கார் பிரியர். இவரிடம் ஃபோர்டு எஃப்650 உள்ளது. இது தரையில் நடமாடும் கப்பல் போன்றது. சில மாதங்கள் முன்னதாக இவரது கார் பற்றிய செய்தி மலையாள ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. இவரது கார் பற்றிய வீடியோ கிட்டத்தட்ட 1 மில்லியன் வியூஸ் போய் வைரலானது.
அதேபோல இவரது பங்களா பற்றி எடுக்கப்பட்ட ஹோம் டூர் வீடியோ 2 மில்லியன் வியூவ்ஸ் கடந்து போனது. இவரது வீடியே ஏதோ கப்பல் துறை முகம் மாதிரி பிரம்மாண்டமாக இருக்கும். இந்தக் கோடீஸ்வரர் பற்றி கேரளாவில் யாரைக் கேட்டாலும் சொல்லும் அளவுக்கு மாபெரும் ஸ்டாராக வலம் வருகிறார் பாபி செம்மனூர்.
கடந்த மே மாதம் பாபி செம்மனூர், சவுதி அரேபியச் சிறையில் சிக்கித் தவித்து வரும் கேரள மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த அப்துல் ரஹிம் என்பவரை மீட்பதற்காக 'யாசகா யாத்ரா' என்ற நிதித் திரட்டும் பேரணியைத் தொடங்கினார். அதற்காக 34 கோடி நிதியைத் திரட்ட மக்களைச் சந்தித்து நன்கொடை கேட்டு வந்தார். அந்தச் செய்தி கேரள மக்களைக் கடந்து பல மாநிலங்களில் இவரது பெயர் பிரபலமானது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி வீடு இழந்த 100 பேருக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக இடத்தை இலவசமாகக் கொடுக்க இருப்பதாக பாபி செம்மனூர் அறிவித்துள்ளார். இது குறித்து பிபிசிக்கு பேட்டி அளித்துள்ள பாபி, "மொத்தம் 100 குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக நிலங்களைக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். இங்கே எனக்கு 1000 ஏக்கர் நிலம் உள்ளது. அதை ஒட்டிதான் இந்த நிலங்களைக் கொடுக்க உள்ளேன். அந்த நிலத்தில் ஒரு சிறு பகுதிதான் இது. அதையே கொடுக்க தீர்மானித்திருக்கிறேன்.
எங்குப் பார்த்தாலும் எல்லோரும் அழுது கொண்டுள்ளனர். பலரும் அவர்களுக்கு உணவு, உடை எல்லாம் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். அவர்கள் யாருக்கும் தங்க வீடு இல்லை. அவர்கள் எங்கே போவார்கள்? எங்கே தங்குவார்கள்? அதுதான் கவலையாக உள்ளது. அவர்கள் சம்பாதித்த பணத்தை வைத்துக் கட்டிய வீடுகள் அழிந்துவிட்டன. ஆகவேதான், போச்சே ஃபேன்ஸ் என்ற எனது அறக்கட்டளை மூலம் அவர்களுக்கு வீடுகள் வழங்க உள்ளோம். அவர்கள் வீடுகளைக் கட்டிக் கொள்ளப் பணம் இல்லை. எனவே கட்டுமான செலவுக்கும் உதவ உள்ளோம்.
இது பற்றி அமைச்சரிடம் நேற்று விவாதித்தேன். அவர்கள் சில யோசனைகளை வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் பட்டியலைக் கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். நாம் உதவி செய்வது முக்கியமல்ல, செய்யும் உதவி சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டும். அதுதான் முக்கியம்.
இந்த 100 வீடுகளைக் கட்ட 10 முதல் 15 ஏக்கர் நிலம் தேவைப்படும் எனக் கணக்கிட்டுள்ளோம். ஒருவேளை அதைத்தாண்டிச் சென்றால் கூடுதல் நிலத்தையும் தர இருக்கிறோம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications