கடைசி வரை திக்திக்.. கலங்க வைத்த பாஜக வேட்பாளர்.. திருவனந்தபுரத்தில் 4வது முறையாக சசிதரூர் வெற்றி
திருவனந்தபுரம்: பாஜக வேட்பாளரான ராஜீவ் சந்திரசேகர் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடும் போராட்டத்திற்கு பின்னர், சிட்டிங் எம்பியும் காங்கிரஸ் வேட்பாளருமான சசி தரூர் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை வெற்றி பெற்றதால், சசிதரூர் நான்காவது முறை திருவனந்தபுரம் எம்பி என்ற சாதனை படைத்துள்ளார்.
கேரளா என்றாலே படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம். முடிவெடுத்தால் தமிழநாட்டை போல் ஒரே முடிவு தான் எடுப்பார்கள். போட்டால் ஒன்சைடாகவே போடுவார்கள்.. அதை இந்த முறையும் நிரூபித்துள்ளார்கள். இங்கு பொதுவாக கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டியே நடக்கும். ஒன்று கம்யூனிஸ்டுகள் ஜெயிப்பார்கள்.. இல்லாவிட்டால் காங்கிரஸ் ஜெயிக்கும். இதுதான் இன்று வரை உள்ள நடைமுறை,

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், சிபிஐ(எம்) 1 இடத்திலும், காங்கிரஸ் 15 இடத்திலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 1 இடத்திலும், கேரள காங்கிரஸ் (எம்) 1 இடத்திலும், ஐயுஎம்எல் 2 இடத்திலும் வெற்றி பெற்றன.
இந்த முறை லோக்சபா தேர்தல் கேரளாவில் ஆலப்புழா, ஆலத்தூர், அட்டிங்கல், சாலக்குடி, எர்ணாகுளம், இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கொல்லம், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம், மாவேலிக்கரா, பாலக்காடு, பத்தனம்திட்டா, பொன்னானி , திருவனந்தபுரம், திருச்சூர், வடகரா, வயநாடு என மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் காங்கிரஸ் மட்டும் 13 இடங்களிலும், ஐயுஎம்எல் கட்சி இரண்டு இடங்களிலும், கேரளா காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஆர்எஸ்பி கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. அதேநேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் மிகவும் கவனிக்கப்பட்ட தொகுதிகள் என்றால் மூன்று தொகுதிகள் அதில் முதன்மையானது ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு. வயநாட்டில் அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி ராஜாவின் மனைவியான ஆனி ராஜா போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அம்மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிட்டுள்ளார். இங்கு ராகுல் காந்தி 364422 வாக்குகள் வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜாவை தோற்கடித்துள்ளார்.
அடுத்ததாக திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் ஆணையம் வெளியிட்ட கடைசி அறிவிப்பின் படி, பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமாரைவிட 74686 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த சூழலில் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராஜீவ் சந்திரசேகர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பண்ணயன் ரவீந்திரன் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சசி தரூர் ஆகியோர் போட்டியில் இருந்தனர். இதில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் ஆரம்பத்தில் முன்னிலையில் இருக்கிறார்.. இவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் இருந்தார். சசிதரூரைவிட பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் இடையே தபால் வாக்கு தொடங்கி கடைசி சுற்று வரை கடும் போட்டி நிலவியது. இறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்றுள்ளார்.
இறுதியாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, சசிதரூர் 358155 வாக்குகள் பெற்றுள்ளார். இதற்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் 342078 வாக்குகள் பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பண்ணயன் ரவீந்திரன் 247648 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர், பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகரைவிட 16077 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications