Dileep Manju Warrier: மஞ்சு வாரியர் சொன்னதற்கு பிறகுதான்... நடிகர் திலீப் பரபரப்பு தகவல்!
திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நடிகர் திலீப், இந்த வழக்கில் கிரிமினல் கூட்டுச் சதி உண்டு, அதனை விசாரிக்க வேண்டும் என மஞ்சுவாரியர் சொன்னதில் இருந்து எனக்கு எதிரான கூட்டுச் சதி ஆரம்பித்தது என திலீப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தெய்வத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று சத்தியம் வென்றுள்ளது. இந்த வழக்கில் கிரிமினல் கூட்டுச் சதி உள்ளதாகவும் அதை பற்றி விசாரிக்க வேண்டும் என மஞ்சு வாரியர் கூறியதைத் தொடர்ந்துதான் எனக்கு எதிரான கூட்டுச் சதி தொடங்கியது.
அந்த காலகட்டத்தில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், கிரிமினல் போலீஸ் டீமை உருவாக்கினார். அந்த டீம் சிறையில் இருந்த குற்றவாளிகளுடன் சேர்ந்து பொய்க் கதையை புனைந்தது. அவர்கள் சில செய்தி நிறுவனங்களை கொண்டு பொய் கதைகளை பரப்பினர்.
பொய் கதை
அந்த டீம் புனைந்த பொய்க் கதை கோர்ட்டில் நிற்கவில்லை, இந்த வழக்கில் என்னை குற்றவாளியாக்குவதற்காக கூட்டுச் சதி நடந்துள்ளது. என் இமேஜை கெடுக்கும் வகையில் எனக்கு எதிராக இந்த வழக்கை புனைந்துள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக எனக்காக ஆத்மார்த்தமாக துணையாக இருந்த நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அது போல் எனக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜோடிக்கப்பட்ட வழக்கு
என் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. எனது திரையுலக அந்தஸ்தை கெடுக்கவே என் பெயரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டது. ஆனால் இன்று நீதிமன்றம் என்னை குற்றவாளி இல்லை என கூறிவிட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஹனி வர்கீஸுக்கு நன்றி என திலீப் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கு
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திலீப் உள்ளிட்ட 10 பேரும் வழக்கு நடைபெற்ற எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதில் நடிகர் திலீப் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் இல்லை என கோர்ட் தெரிவித்தது. அதே சமயம் பல்சர் சுனி உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம் வரும் 12 ஆம் தேதி அவர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிக்கிறது. இந்த தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்த திலீப் வெளியே வந்ததும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மஞ்சு வாரியர்
அப்போதுதான் தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியரை விமர்சித்து பேசியுள்ளார். 1998ஆம் ஆண்டு மஞ்சுவாரியரும் திலீப்பும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். இந்தநிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2015 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். பின்னர் 2016ஆம் ஆண்டு நடிகை காவ்யா மாதவனை திலீப் மணந்து கொண்டார்.
காவ்யா மாதவன்
மஞ்சுவாரியருடன் வாழ்ந்து கொண்டிருந்த போதே திலீப்பிற்கு காவ்யா மாதவனுடன் பழக்கம் ஏற்பட்டதாம். இதை அறிந்த பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை, மஞ்சுவிடம், திலீப்- காவ்யா நெருக்கம் குறித்து தெரிவித்தாராம். இதனால் மஞ்சுவுக்கும் திலீப்பிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கடைசியில் பிரிவு வந்துவிட்டது. இந்த கோபத்தில்தான் அந்த நடிகையை ஆட்களை வைத்து அப்படியொரு காரியத்தில் திலீப் ஈடுபட வைத்தார் என காவல் துறை விசாரணையில் தெரியவந்ததாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications