”கேரளா” தனிநாடா? 'வெளியுறவுத் துறை செயலாளர்’ நியமனம் எதுக்கு? பினராயி விஜயனுக்கு பாஜக எதிர்ப்பு
திருவனந்தபுரம்: கேரளா மாநில அரசு, வெளியுறவுத் துறை செயலாளராக வாசுகி ஐ.ஏ.எஸ்.-ஐ நியனம் செய்து உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கேரளா அரசின் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை செயலாளரான கே.வாசுகி, வெளியுறவுத் துறை விவகாரங்களையும் கூடுதலாக கவனிப்பார் என அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது. வெளியுறவுத் துறை விவகாரங்கள் என்பது மத்திய அரசுக்கு உரியது; ஒரு மாநில அரசால் எப்படி இத்துறைக்கு ஒரு செயலாளரை நியமிக்க முடியும்? கேரளா அரசு ஒன்றும் தனி நாடு அல்ல என பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் கடந்த 15-ந் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டிருந்தது. அதில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை செயலாளரான கே.வாசுகி- வெளியுறவுத் துறை விவகாரங்களை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் டெல்லியில் உள்ள மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதகரங்கள் ஆகியவற்றுடன் வாசுகி ஐஏஎஸ் தொடர்பு கொள்வதற்கு டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தின் ஆணையர் உதவுவார்; மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பொது நிர்வாகம் (அரசியல்) துறை வாசுகி ஐஏஎஸ்-க்கு உதவும் எனவும் கேரளா அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசின் இந்த அரசாணைக்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கேரளா மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தமது எக்ஸ் பக்கத்தில், மாநில அரசுக்கான வெளியுறவுத் துறை செயலாளரை பினராயி விஜயன் அரசு நியமித்துள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்தை மீறக் கூடியதாகும். வெளியுறவுத் துறை விவகாரங்களை கவனிக்க கேரளாவின் ஆளும் இடதுசாரி அரசுக்கு அதிகாரமே இல்லை. நமது நாட்டின் அரசியல் சாசனத்துக்கு எதிரானது இந்த நடவடிக்கை. கேரளா என்ற மாநிலத்தை ஒரு தனிநாடாக மாற்றுவதற்கு முதல்வர் பினராயி விஜயன் முயற்சிக்கிறாரா? என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications