தங்க நகைகளை திருடி சென்ற காகம்.. 10 நாள் பதறிய குடும்பம்.. கடைசியில் ட்விஸ்ட்.. இப்படியும் நடக்குமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் கண் அசந்த நேரத்தில் தங்க வளையல், தங்க செயினை காகம் ஒன்று தூக்கி சென்று குடும்பத்தினரை 10 நாட்களாக பதற்றமடைய செய்தது. இறுதியாக தற்போது அந்த நகைகளை குடும்பத்தினர் பத்திரமாக மீட்டனர்.
வீட்டில் இருக்கும் பணம், தங்க நகைகள் உள்பட விலையுயர்ந்த பொருட்கள் திடீரென்று திருடு போவது பல இடங்களில் நடந்து வருகிறது. வீடு புகுந்து திருடர்கள், கொள்ளையர்கள் இத்தகைய செயலை செய்யும் நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து பொருட்களை மீட்பது இயல்பான ஒன்றாக உள்ளது.

ஆனால் தற்போது தங்க நகைகளை காகம் ஒன்று திருடி சென்று தனது கூட்டில் மறைத்து வைத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? தங்க வளையல் எப்படி மீட்கப்பட்டது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள கபாட் பகுதியில் வசித்து வருபவர் பிபி நசீர். இவரது மனைவி பெயர் ஷரீபா. இந்த தம்பதியின் மகள் பெயர் பாத்திமா ஹைபா. இவர் கிரேட் ஒன் படித்து வருகிறார். இந்நிலையில் தான் இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு திருமணம் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க பாத்திமா தங்க செயின், தங்க வளையல் அணிந்து சென்றார்.
திருமண நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய பாத்திமா தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி ஒரு பேப்பரில் பொதிந்து வீட்டு கிரில் அருகே வைத்தார். மேலும் அந்த நகைகளை எடுத்து பத்திரமாக வைக்கும்படி அவர் தனது தாய் ஷரிபாவிடம் கூறினார். ஆனால் ஷரிபா மறந்துவிட்டார். இதனால் நகை அப்படியே இருந்தது.
இந்நிலையில் தான் 10 நாட்களுக்கு பிறகு அவர்கள் மீண்டும் உறவினர் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது பாத்திமாவின் நகைகள் மாயமாகி இருந்தது. இதையடுத்து அவர்கள் பாத்திமா நகையை கழற்றி வைத்த இடம் உள்பட வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பதற்றமடைந்தனர்.
இருப்பினும் அவர்கள் வீட்டு வளாகத்திலும் தேட தொடங்கினர். அப்போது தங்க செயின் அவர்களிடம் கிடைத்தது. வீட்டு வளாகத்தில் இருந்த தென்னை மரத்தின் அடியில் இருந்து தங்க செயின் கிடைத்தது. இருப்பினும் 6 கிராம் எடை கொண்ட தங்க வளையல் மாயமாகி இருந்தது. அதனை அவர்கள் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் தான் அந்த தென்னை மரத்தின் மேல் காகம் கூடு கட்டியிருப்பதும், அந்த கூட்டில் வளையல் ஒன்று இருப்பதையும் பாத்திமாவின் உறவினர் சுலைகா மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான சாந்தா பார்த்தனர். இதுபற்றி உடனடியாக அவர்கள் பாத்திமாவின் பெற்றோரிடம் கூறினர். அப்போது தான் காகம் தங்க வளையலை தூக்கி சென்று கூட்டில் வைத்திருக்கலாம் என அவர்கள் நினைத்தனர்.
இதையடுத்து உறவினர் அகமது கோயா அந்த தென்னை மரத்தில் காகத்தின் கூட்டை பார்த்தார். அப்போது அந்த கூட்டின் உள்ளே 6 கிராம் எடை கொண்ட தங்க வளையல் இருந்தது. இதையடுத்து அந்த வளையலை அவர் எடுத்து வந்து பாத்திமாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். மேலும் வீட்டு கிரீல் அருகே பேப்பரில் தங்க நகைகள் பொதிந்து வைத்திருந்ததை தின்பண்டம் என காகம் நினைத்து அதனை தூக்கி சென்று கூட்டில் வைத்தது தெரியவந்தது. மேலும் கூட்டில் இருந்த தங்க செயின் கீழே விழுந்ததும், வளையல் கூட்டிலேயே இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications