வயநாடு.. மகளின் ஒரு கைக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை.. கண்கலங்க வைத்த சம்பவம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து 7 வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 100க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்த தனது மகளின் ஒரு கைக்கு தந்தை இறுதிச் சடங்கு செய்த சம்பவம் காண்போர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கன மழையால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு கடந்த 29ம் தேதி ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். மருத்துவமனைகள் மற்றும் முகாம்களுக்கு தொடர்ந்து உறவினர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர். அங்கு உறவினர்கள் கிடைக்கவில்லை எனில் பிணவறைகளுக்குச் சென்று தேடி வருகின்றனர். மீட்கப்பட்டு கொண்டு வரப்படும் அனைத்து சடலங்களையும் அடையாளம் காணும் கொடுமை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, இன்று 7வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மாநில மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மலைப் பகுதிகளில் ராணுவத்தினர் ஹெலிகாப்டர், வாக்கி டாக்கி, ரேடார் மற்றும் மோப்பநாய்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாட்டைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ஜிசா. நிலச்சரிவில் காணாமல்போன மகளைத் தேடி வந்த ராமசாமிக்கு பல்வேறு கட்டத் தேடுதல் பணிக்குப் பிறகு மகளின் ஒரு கை மட்டும் கிடைத்துள்ளது. அவரது விரலில் திருமண மோதிரமும், அதில் பொறிக்கப்பட்டிருந்த அவரது கணவர் பெயரையும் வைத்து அது தன் மகள் ஜிசாவின் கைதான் என்பதை ராமசாமி உறுதி செய்துள்ளார். இதையடுத்து, ஜிசாவின் கையை ஒரு வெள்ளைத் துணியால் சுற்றி, தகன மேடையில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவரது தந்தை தன் முகத்தை மூடியபடி கதறி துடித்த சம்பவம் அனைவரது மனதையும் ரணமாக்கியுள்ளது.
தன் மகளின் ஒரு கைக்கு மட்டும் இறுதிச் சடங்கு செய்யும் ராமசாமியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்யும் வகையில் அந்தப் புகைப்படம் உள்ளது.












Click it and Unblock the Notifications