திருச்சூர் அருகே தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கிய ஓட்டுநர்.. ஐந்து தமிழர்கள் பலி.. என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் அருகே நாட்டிகா என்ற இடத்தில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி ஏறியது.. இதில் நிகழ்விடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்த ஐந்து பேரும் தமிழர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரளா மாநிலம் கண்ணூரிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்ற டிம்பர் லாரி ஒன்று இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் அருகே நட்டிக்கா பகுதியில் அமைந்துள்ள ஜேகே சினிமாஸ் திரையரங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து விலகி சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தோர் மீது ஏறி இறங்கியது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்கள். மேலும் படுகாயமடைந்த 11 பேர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்த 5 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார்.. எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரம் விரைவில் தெரியவரும்.
இந்த விபத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது, லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததும், இதன் காரணமாக லாரி அவரது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.. விபத்து குறித்து வழக்குப்பதிந்துள்ள வாலப்பாடு காவல்துறையினர் லாரியில் இருந்த அலெக்ஸ், ஜோஸ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இதனிடையே விபத்து நடந்த இடம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி, விபத்து நடந்த நாட்டிகா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதையும் மீறி லாரிவந்தால் விபத்து ஏற்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் சொல்கின்றன. திருச்சூர் லாரி விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூக்க கலக்கம் வந்தால் லாரிகளை ஓரமாக நிறுத்தி தூங்கிவிட்டு வாகனத்தை இயக்கினால் இதுபோன்ற பல விபத்துகள் நடப்பது தவிர்க்கப்படும் என்றும், அப்பாவி மக்கள் பலியாவை தடுக்க வேண்டியது அவசியம் என்றும் குரல்கள் வலுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications