கனரா வங்கி கேன்டீனில் மாட்டிறைச்சிக்கு தடை.. கோபமாகி Beef திருவிழா நடத்திய கேரளா ஊழியர்கள்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கொச்சியில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கேன்டீன் வசதி உள்ளது. இந்நிலையில் தான் பீகாரில் இருந்து வந்த பிராந்திய மேலாளர் கேன்டீன் மற்றும் அலுவலகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தார். இதனால் கோபமான வங்கி ஊழியர்கள் பிராந்திய மேலாளர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து புரோட்டா மற்றும் மாட்டிறைச்சி சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளா மாநிலம் கொச்சியில் கனரா வங்கி உள்ளது. இங்கு கேன்டீன் வசதி இருக்கிறது. வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்கள் இந்த கேன்டீனை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்தான் சமீபத்தில் பீகாரை சேர்ந்த ஒருவர் கொச்சி கனரா வங்கியின் பிராந்திய மேலாளராக நியமனம் செய்யப்பட்டார். இவர் ஊழியர்களை கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் அதிருப்தியடைந்தனர்.
அதுமட்டுமின்றி வங்கி கேன்டீன் மற்றும் அலுவலகத்துக்குள் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தார். இதனால் கொதித்தெழுந்த வங்கி ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கினர். பிராந்திய மேலாளரின் அலுவலகம் முன்பு வங்கி ஊழியர்கள் திரண்டு கேன்டீனில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டதற்கு எதிராக கோஷமிட்டனர். அதுமட்டுமின்றி புரோட்டாவுடன் மாட்டிறைச்சி சேர்த்து சாப்பிட்டனர். Beef திருவிழா போல் அவர்கள் மாட்டிறைச்சியை பகிர்ந்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்திய வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பு (Bank Employees Federation of India or BEFI) சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டமைப்பின் தலைவர் எஸ்எஸ் அணில் கூறுகைியல், ‛‛வங்கியில் சிறிய கேன்டீன் இயங்கி வருகிறது. குறிப்பிட்ட நாட்களில் கேன்டீனில் மாட்டிறைச்சி சமைக்கப்படும். ஆனால் பிராந்திய மேலாளர் கேன்டீன் ஊழியர்களிடம் மாட்டிறைச்சியை சமைக்க கூடாது என்று தடை போட்டுள்ளார்.
இந்த வங்கி அரசியலமைப்பின் வழிக்காட்டுதல்படி செயல்பட்டு வருகிறது. உணவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். நம் நாட்டில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை தேர்வு செய்து சாப்பிடலாம். மாட்டிறைச்சி சாப்பிடுங்கள் என்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை'' என்றார்.
இந்த போராட்டத்துக்கு இடதுசாரி கூட்டணியில் உள்ள சுயேச்சை எம்எல்ஏ கேடி ஜலீல் ஆதரவு தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛என்ன ஆடை அணிய வேண்டும்? எந்த உணவு சாப்பிட வேண்டு? என்பதை மேலதிகாரிகளால் முடிவு செய்ய முடியாது. இது எங்களின் செம்மண் பூமி (இடதுசாரி ஆட்சியை குறிப்பிடுகிறார்). எங்கெல்லாம் செங்கொடி பறக்கிறதோ அங்கெல்லாம் பாசிஸ்டுகளுக்கு எதிராக பேசலாம்.. செயல்படலாம். கம்யூனிஸ்ட்டுகள் ஒன்று சேர்ந்தால் காவி கொடியை தூக்கி பிடிப்போரை காம்ரேட்ஸ்கள் விடமாட்டார்கள். அதுதான் உலக வரலாறு'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications