உங்க வாகனத்தை நண்பர்களுக்கு ஓட்ட கொடுப்பது சட்டவிரோதமா? ரூல்ஸ் என்ன? கேரள போக்குவரத்து அதிகாரி பதில்
திருவனந்தபுரம்: உங்களது வாகனத்தை நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ ஓட்ட கொடுப்பது சட்டவிரோதமா?, இது போக்குவரத்து விதிகளை மீறுவதாக அமையுமா? என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும். இந்த நிலையில் இது தொடர்பாக கேரள போக்குவரத்து ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கேரளா மநிலம் ஆலப்புழாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் மருத்துவ மாணவர்கள் 6 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான காரை சட்ட விரோதமாக வாடகை டேக்சி காராக பயன்படுத்தியது போலீஸ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, சொந்த பயன்பாட்டுக்கான காரை வாடகைக்கு இயக்கப்பட்டதை கண்டறிந்தனர்.

இந்த விவகாரம் தற்போது வாகன ஓட்டிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதாவது, நண்பர் அல்லது உறவினரின் வாகனத்தை எடுத்து செல்லலாமா? இது சட்ட விரோதமா? என வாகன ஓட்டிகள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் இது தொடர்பாக விவாதித்தனர்.
இந்த நிலையில் தான் இது தொடர்பாக கேரள போக்குவரத்து ஆணையர் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:- அவசர காலங்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களின் காரை எடுத்து செல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. 8 இருக்கைகள் அல்லது அதற்கு மேல் இருக்கை கொண்ட வாகனங்களை இப்படி பயன்படுத்த முடியாது. சிறிய கார்களை சில நேரம் உறவினர்களிடம் கடனாக வாங்கி பயன்படுத்துவது பிரச்சினை இல்லை.
அதே வேளையில், தொடர்ச்சியாக இப்படி பயன்படுத்திக்கொண்டு இருப்பது சட்டவிரோதம்தான். தனியார் வாகனங்களை பொறுத்தவரை அதன் உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்படுத்துவதற்கு என்றே பதிவு செய்யப்பட்டு இருக்கும். இதை தவறாக பயன்படுத்துவது சட்ட விரோதமாகும். விபத்து ஏற்படும் போது காரின் உரிமையாளர் காரில் இல்லையென்றால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க மறுக்க வாய்ப்புள்ளது.
காரின் உரிமையாளரின் தேவைக்காகத்தான் பயணம் மேற்கொண்டோம் என்பதை காப்பீட்டு நிறுவனங்களிடம் நிரூபிக்க வேண்டும். தனியார் கார்களை தவறுதலாக பயன்படுத்தும் விவகாரத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் மிகக் கடுமையான விதிகளை வைத்துள்ளன. தனியார் வாகனத்தை கட்டணம் வாங்கி கொண்டு வாடகை கார் போன்று இயக்கினால், அனுமதி விதிகளை மீறிய செயலாகும்.
இந்த விதிமுறை கண்டறியப்பட்டால் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகன அனுமதி மற்றும் வாகனத்தின் ஃபிட்னஸ் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்படும். விதிமுறைகளை மீறுவது தொடர்ந்தால் அபராதம் இரு மடங்காக்கப்படும். வாகன பதிவு ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். இந்த கால கட்டத்தில் வாகனத்தை இயக்கினால் காரே பறிமுதல் செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications