கேரளா: 5 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு- பீகார் இளைஞருக்கு தூக்கு தண்டனை!
திருவனந்தபுரம்: நாட்டையே உலுக்கிய கேரளாவின் ஆலுவாவில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியான பீகார் இளைஞர் அஸ்பக் ஆலமுக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது கேரளா நீதிமன்றம்.
கேரளா மாநிலம் ஆலுவாவில் பீகாரை சேர்ந்த இளைஞர் அஸ்பக் ஆலம் வசித்து வந்தார். அப்பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு உடலை குப்பை தொட்டியில் வீசி சென்றார் அஸ்பக் ஆலம்.

கேரளாவை மட்டுமல்ல நாட்டையே இந்த சம்பவம் கடுமையாக உலுக்கியது. கடந்த ஜூலை 5-ந் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது. சிசிடிவி காட்சிகள் உதவியுடன் உடனடியாக பீகார் இளைஞர் அஸ்பக் ஆலம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அஸ்பக் ஆலம் கைது செய்யப்பட்ட 26 நாட்களில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை விரைவாக நடைபெற்றது.
கேரளாவின் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் 100-வது நாளில் விசாரணை நிறைவடைந்தது. இந்த விசாரணைகளின் முடிவில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பீகார் இளைஞர் அஸ்பக் ஆலம் குற்றவாளி என கடந்த வாரம் கேரளா எர்ணாகுளம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று அஸ்பக் ஆலம் தண்டனை விவரங்களை நீதிமன்றம் அறிவித்தது. ஆலுவாவில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற அஸ்பக் ஆலமுக்கு கேரளா போக்சோ நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.












Click it and Unblock the Notifications