SIR தந்த பிரஷர்.. டார்க்கெட்டால் வாக்குச்சாவடி அலுவலர் தற்கொலை.. மாநிலம் முழுதும் போராட்டம்
திருவனந்தபுரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்த பள்ளி ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் விண்ணப்பம் வழங்குவதற்கு டார்க்கெட்டை முடிக்க முடியாத பிரஷரில் தற்கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் கோபமாகி உள்ள அரசு ஊழியர்கள், பிஎல்ஓக்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
கேரளாவின் கண்ணூரை சேர்ந்தவர் அனிஷ் ஜார்ஜ் (வயது 44). இவர் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தற்போது தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடக்கிறது.

அதேபோல் கேரளாவிலும் அந்த பணி நடந்து வருகிறது. இதனால் பிஎல்ஓ எனும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான படிவங்களை வழங்கி வருகின்றனர்.
இந்த பணிக்கான அனீஷ் ஜார்ஜ்சும் வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் நேற்று அவர் திடீரென்று தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அனீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஏற்பட்ட பிரஷர் காரணமாக தான் அனீஷ் ஜார்ஜ தற்கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். அதாவது தினமும் குறிப்பிட்ட அளவிலான வாக்காளர்களுக்கு விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டார்க்கெட்டை முடிக்க முடியாமல் அனீஷ் ஜார்ஜ் திணறியுள்ளார். இருப்பினும் நள்ளிரவு வரை அவர் இந்த பணிகளை மேற்கொண்டு வந்துள்ளதாக அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி அவரது குடும்பத்தை சேர்ந்த ஷ்யாம் என்பவர் கூறுகையில், ‛‛நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 2 மணிக்கு தான் அனீஷ் ஜார்ஜ் வீட்டுக்கு வந்தார். SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வழங்குவதில் மனஅழுத்தத்துக்கு உள்ளானார். இப்போது தற்கொலை செய்துவிட்டார்'' என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் இயற்கைக்கு மாறான சாவு (Unnatural Death) என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
அனீஷ் ஜார்ஜின் இந்த தற்கொலை அரசு ஊழியர்களிடையே கோப அலையைத் தூண்டியுள்ளது. கேரளா முழுவதும் இன்று (நவம்பர் 17) போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 3 முக்கிய அமைப்புகளாக உள்ளன மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல் மன்றம், ஆசிரியர் சேவை அமைப்புகளின் கூட்டுக் குழு மற்றும் கேரள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சங்கம் சார்பில் இன்று நாடு முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மேலும் இன்றைய தினம் பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணி புறக்கணிப்பை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் போராட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‛‛இந்திய தேர்தல் ஆணையம் எங்களின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கையை தள்ளிவைக்க கூறியும் கேட்காமல் உள்ளது. பிஎல்ஓக்களுக்கு பிரஷர் அதிகரித்துள்ளது. இரவு -பகலாக பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் குறைந்த காலத்துக்குள் தகுதிக்கு மீறிய டார்க்கெட் வழங்கப்பட்டுள்ளது. எங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால் போராட்டம் தீவிரமாகும்'' என்று ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications