கேரள மாடலுக்கு என்ன ஆச்சு? மீண்டும் மளமளவென அதிகரித்த கொரோனா.. என்ன காரணம்.. பரபர தகவல்
திருவனந்தபுரம்: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி வைரஸ் பாதிப்பு தினமும் 10 ஆயிரத்தைக் கடந்தே பதிவாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய மே வரை கொரோனா 2ஆம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது.
அப்போது நாட்டிலுள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. அதன் பின்னரே வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது.

கேரளா
நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தினசரி வைரஸ் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழாகவே பதிவாகி வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையிலும்கூட, கேரளாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்குத் தினசரி வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் மேலாகவே பதிவாகி வருகிறது. இது அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் வசிக்கும் மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் பாதிப்பு
கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கேரளாவிலுள்ள ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுத வேண்டும் என அறிவித்தது பெரும் சர்ச்சையானது. இதைக் கண்டித்து அங்கு மாணவர் தலைவர் எரிக் ஸ்டீபன் 8 நாட்கள் உண்ணாவிரதம் கூட இருந்தார். இருப்பினும், தேர்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு 35 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

வேக்சின் பணிகள்
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் வேக்சின் பணிகள் வேகமாகவே நடைபெறுகிறது. கேரளாவில் மக்கள்தொகையில் 18+ மேற்பட்டவர்களில் இதுவரை 20.9% பேருக்கு வேக்சின் அளிக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 9.9ஐ விட அதிகம். இருப்பினும், சிரோ சர்வே-இல் வெறும் 42.7% மக்களிடையே மட்டுமே ஆன்டிபாடி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 67.6%ஐ விடக் குறைவாகும்.

கேரள மருத்துவர்
இது குறித்து திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சந்தோஷ் குமார் கூறுகையில்,"மாநிலத்தில் பாசிட்வ் விகிதம் 12% ஆக உள்ளது. தினசரி 15 ஆயிரம் வரை வைரஸ் பாதிப்பு செல்கிறது. ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. மருத்துவமனைகளில் இதுவரை 50% படுக்கைகள் மட்டுமே இதுவரை நிரம்பியுள்ளன. வேகமாக நடைபெற்ற வேக்சின் பணிகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதியாவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது" என்றார்.

எதிர்பார்த்த ஒன்று தான்
கொரோனா அதிகரிப்பது குறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான். கேரளாவில் ஏப்ரல் மாதம் தொடங்கிய கொரோனா 2ஆம் அலை, மே மாதம் உச்சம் தொட்டது. இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனாலும், நிலைமை இப்போது முழுமையாகக் கட்டுக்குள் தான் இருக்கிறது" என்றார்.

பக்ரீத் பண்டிகை
கேரளா அரசு கடந்த வாரம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி இந்திய மருத்துவ சங்கமும்கூட கண்டித்திருந்தது. இருப்பினும், அரசு தனது அறிவிப்பை வாபஸ் பெறவில்லை. இப்படி கடந்த சில வாரங்களாகவே கேரள அரசின் முடிவுகள் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications