"மதம்" மாற மாட்டியா?.. தலித் இளைஞன் மீது "டாக்டர் மச்சான்" கொலைவெறி தாக்குதல்.. உயிர் ஊசல்..!
மதம் மாற மறுத்த தலித் இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: திருமணத்திற்கு பிறகு, கிறிஸ்தவ மதம் மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த, தலித் இளைஞன் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிரயின்கிலு என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் மிதுன் கிருஷ்ணன்.. 26 வயதாகிறது..
இந்து மதத்தை சேர்ந்த இவர், தீப்தி என்ற கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார்.. தீப்திக்கு 24 வயதாகிறது.. எப்படியோ இரு வீட்டிலும் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து, கடந்த 29-ம் தேதி இருவருமே திருமணம் செய்து கொண்டனர்.

காணவில்லை
இதனிடையே, மகளை காணவில்லை என்று கடந்த அக்டோபர் 29-ம் தேதியன்று, தீப்தியின் பெற்றோர் போலீசில் புகார் தந்தனர்.. அந்த புகாரின் பேரில் இரண்டு வீட்டு பெற்றோர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போது, மிதுனை விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடனேயே வாழ விருப்பம் என்றும் தீப்தி போலீசில் கறாராக தெரிவித்துவிட்டார்.. எனவே, பெற்றோர்களை சமாதானப்படுத்தி போலீசாரும் அனுப்பி வைத்துவிட்டு விட்டனர்.

டாக்டர்
இதற்கு பிறகும் தீப்தியின் வீட்டில் இந்த விவகாரம் லேசில் அடங்கவில்லை.. தீப்தியின் அண்ணன் டேனிஸ் என்பவர், புதுமண தம்பதிகளை நேரில் வந்து சந்தித்து பேசினார்.. இவர் ஒரு டாக்டர்.. தங்கை ஒரு இந்து மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால், மிதுனிடம், நீங்க சர்ச்சுக்கு வரணும்.. நடந்த திருமணம் குறித்து உங்களிடம் பேச வேண்டி இருக்கிறது என்று அழைத்துள்ளார்.

மதமாற்றம்
உடனே மிதுனும், தீப்தியை அழைத்துக் கொண்டு சர்ச்சுக்கு சென்றுள்ளார்.. அங்கு போனதுமே, கிறிஸ்தவ மதத்துக்கு உடனடியாக மாற வேண்டும் என்று டாக்டர் டேனிஸ் கட்டாயப்படுத்தி உள்ளார்.. இதை கேட்டு அதிர்ந்து போன மிதுன், தன்னால் மதம் மாற முடியாது என்று கறாராக தெரிவித்துள்ளார்.. உடனே டேனிஸ், அப்படியானால் வீட்டிற்கு வந்து எங்கள் அம்மாவை சந்தித்து பேசுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

தாக்குதல்
இதையடுத்து, தீப்தியின் அம்மாவை தம்பதி இருவருமே சந்திக்க சென்றார்கள்.. ஆனால், 2 பேரையுமே அவர் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.. பிறகு திடீரென நண்பர்களுடன் அங்கு வந்த டேனிஸ், மிதுனை கண்மூடித்தனமாக தாக்க தொடங்கினார்.. அதிர்ந்து போன தீப்தி, அண்ணனை தடுக்க முயன்றார்.. ஆனால், தீப்தியையும் சரமாரியாக தாக்கினார்கள்.. நிலைகுலைந்து போன மிதுன், அங்கேயே சுருண்டு விழுந்தார்..

சிகிச்சை
தலையில் படுகாயமடைந்த அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. தற்போது அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது. இந்த எதிர்பாராத தாக்குதலையடுத்து, தன்னுடைய அண்ணன் டேனிஸ் மீது தீப்தி போலீசில் புகார் தந்துள்ளார்.. மதம் மாற மறுத்ததற்காக, கணவனை கண்மூடித்தனமாக தாக்கியதாக தீப்தி குற்றஞ்சாட்டியுள்ளார்... இதனிடையே, டேனிஸ் போலீசில் ஒரு புகார் தந்துள்ளார்..

நடவடிக்கை
அந்த புகாரில் வீட்டுக்கு வந்த மிதுன், தன்னுடைய அம்மாவை அசிங்கமாக பேசியதாகவும், அதனால்தான் அவரை தாக்க வேண்டியதாக போயிற்று என்றும், மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இரு தரப்பிலும் வந்துள்ள புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். தாக்குதலில் சம்பந்தப்பட்ட மறறவர்களையும் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications