மாட்டுக்கு தண்ணீர் வைப்பது முதல் பால் கறப்பது வரை... சகலமும் கவனிக்கும் கேரள மின்சாரத்துறை அமைச்சர்
திருவனந்தபுரம்: கொரோனா லாக்டவுனுக்கு மத்தியில் கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மாணி தனது தோட்டத்தில் சகலவிதமான விவசாய பணிகளையும் தாமே கவனித்துக் கொள்கிறார்.
ஏலக்காய், குறுமிளகு, காய்கறிகள் சாகுபடி செய்துள்ள இவர் கறவை மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
வீட்டில் இருக்கும் நேரங்களில் மாடுகளுக்கு தண்ணீர் வைப்பது முதல் பால் கறப்பது வரையிலான அனைத்து பணிகளையும் அமைச்சர் எம்.எம்.மாணியே கவனித்துக்கொள்கிறார்.

மிடுக்கு உடைகள்
அரசியல்வாதிகள் என்றாலே நினைவுக்கு வருவது அவர்களது மிடுக்கு உடையும், வெடிப்பு பேச்சும் தான். அதுவும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, சட்டை காலரில் கூட கறைபடாத வண்ணம் பார்த்துக்கொள்வார்கள். இப்படிப்பட்ட சூழலில் கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மாணி தனது வீட்டை ஒட்டியுள்ள தோட்டத்தில் வேளாண் பணிகளை அவரே கவனித்துக்கொள்கிறார். கொரோனா லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருப்பதற்கு சற்று நேரம் கிடைத்ததால் அவர் அதனை உபயோகமாக மாற்றியுள்ளார்.

உடும்பன்சோழா
இடுக்கி மாவட்டம் உடும்பன்சோழா தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் எம்.எம்.மாணி. 75 வயதான இவருக்கு மின்சாரத்துறை அமைச்சர் பதவியை கொடுத்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். கம்யூனிஸ்ட் கட்சியில் அடிமட்ட பொறுப்பில் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி வரை வகித்தவர். இவருக்கு சொந்தமாக 20 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. அதில் ஏலக்காய், குறுமிளகு, காய்கறிகள் என சாகுபடி செய்து வருகிறார்.

கறவை மாடுகள்
அமைச்சர் எம்.எம்.மாணி வசிப்பது மலைப்பாங்கான பகுதி என்பதால் மலைப்பிரதேசத்தில் விளையக் கூடிய மற்ற பழவகைகளையும் சாகுபடி செய்துள்ளார். மேலும், கறவை மாடுகள் வளர்க்கும் இவர், வீட்டில் இருந்தால் துண்டை தலையில் கட்டிக்கொண்டு அதற்கு தண்ணீர் வைப்பது முதல் பால் கறப்பது வரை தாமே பார்த்துக்கொள்கிறார். பணிக்கு ஆட்கள் இல்லாமல் இல்லை, இருப்பினும் அதில் அவருக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைப்பதாக கூறப்படுகிறது.

லாக்டவுன் அக்ரி சேலஞ்ச்
இதேபோல் அதே இடுக்கி மாவட்டத்தின் மற்றொரு எம்.எல்.ஏ.வான பி.ஜே.ஜோசப், லாக்டவுன் அக்ரி சேலஞ்ச் என்ற பெயரில் விவசாயத்தையும், மரம் வளர்ப்பையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். இவர் கேரள (எம்) காங்கிரஸை சேர்ந்தவர். இதனிடையே கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம்.மாணி தனது இன்னோவா காருக்கு அதிக முறை டயர்களை மாற்றிய சர்ச்சையில் சிக்கியதும், மலைப்பகுதிகளுக்கு பயணம் செய்ய வேண்டியுள்ளதால் பாதுகாப்பு கருதி டயர்களை மாற்றியதாகவும் அவர் விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications