102 சீட்.. கேரளாவில் காங்கிரஸ் அமோக வெற்றி.. துடைத்தெறியப்பட்ட கம்யூ.,! பாஜக எழுச்சி.. முழு விவரம்
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த மாதம் 9 ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டிக்கு தேவையான 71 தொகுதிகளை தாண்டி 102 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதன்மூலம் 10 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதோடு, பாஜக எழுச்சி பெற்றுள்ளது.
கேரளாவில் 2016 முதல் கடந்த 10 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி (எல்டிஎஃப்) ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 9 ம் தேதி கேரளாவில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 140 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 79.63 சதவீத வாக்குகள் பதிவாகின.

மும்முனை போட்டி
கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளதால் மெஜாரிட்டிக்கு மொத்தம் 71 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி (எல்டிஎஃப்), எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி என்று 3 முனை போட்டி நிலவியது.
விறுவிறு ஓட்டு எண்ணிக்கை
இந்நிலையில் தான் தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. காலை 8.15 மணியளவில் தபால் வாக்குகளில் காங்கிரஸ் கூட்டணி 58 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 49 தொகுதிகளிலும், பாஜகவின் என்டிஏ கூட்டணி 3 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது.
பிறகு மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8.45 மணியளவில் காங்கிரஸ் கூட்டணி மெஜாரிட்டியை தொட்டது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகள் உள்ளது; மெஜாரிட்டிக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதன்படி காங்கிரஸ் கூட்டணி 71 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. அதேவேளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 63 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பாஜக கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.
100 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி
காலை 9.30 மணியளவில் காங்கிரஸ் கூட்டணி 88 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 47 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. பாஜகவின் என்டிஏ கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
காலை 11 மணி நிலவரப்படி கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 100 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதில் காங்கிரஸ் மட்டும் 60 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கூட்டணி மொத்தம் 39 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. என்டிஏ கூட்டணியில் பாஜக ஒரு தொகுதியில் முன்னிலை வகித்தது.
102 தொகுதிகளில் அமோக வெற்றி
இந்நிலையில் தான் இரவு 7.30 மணிக்கு கேரளா முழு ரிசல்ட்டும் வெளியானது. அதன்படி காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 தொகுதிகளிலும், கேரளா காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், ஐஎன்டி கட்சி, ஆர்எஸ்பி (Revolutinary Socialist Party) கட்சிகள் தலா 3 தொகுதிகளிலம், சிஎம்பி, கேடிபி, கேசி (ஜே), ஆர்எம்பிஐ கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கிறது.
மா. கம்யூ வீழ்ச்சி - பாஜக எழுச்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மொத்தம் 35 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 8 தொகுதிகளிலும், ஆர்ஜேடி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் இந்த முறை 3 தொகுதிகளில் வாகை சூடி எழுச்சி பெற்றுள்ளது.
எக்ஸிட் போல் முடிவுகள்
முன்னதாக, 'எக்ஸிட் போல்' எனும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இது தற்போது அப்படியே நடநதுள்ளது. அதேவேளையில் கருத்து கணிப்புகளை தாண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி வெல்லும் என்று அந்த கட்சிகளின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால் அந்த நம்பிக்கை கைகூடவில்லை.
2021 தேர்தலில் என்ன நடந்தது?
முன்னதாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 99 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications