கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் தொடர்ந்து கவலைக்கிடம்! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் கடந்த 23 ஆம் தேதி திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 101 வயதாகும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2006-2011 வரை கேரளாவின் முதலமைச்சராக இருந்தார். தற்போது வயத மூப்பு காரணமாக அவர் தீவிர அரசியலிலிருந்து விலகி இருந்தார். முன்னதாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்தான் கடந்த 23ம் தேதி திடீர் நெஞ்சுவலி காரணமாக திருவனந்தபுரம் தனியார் மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2006ம் ஆண்டு மலம்புழாவில் 20,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வி.எஸ். வெற்றி பெற்று கேரளாவின் முதலமைச்சரானார். 2011 வரை பதவி வகித்த வி.எஸ். அரசு சிறப்பான மக்கள் பணிகளுக்காக பாராட்டுகளைப் பெற்றது.
ஆனால், மூணார் மீட்பு நடவடிக்கை உள்ளிட்ட சில விஷயங்கள் கட்சிக்குள் எதிர்ப்புகளைச் சந்தித்தன. அப்போது சி.பி.எம். அரசியல் ஒரு பக்கம் வி.எஸ். இன்னொரு பக்கம் கட்சி என்ற நிலையில் இருந்தது. இதன் விளைவாக, 2011-ல் வெறும் இரண்டு இடங்கள் வித்தியாசத்தில் இடது முன்னணிக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பறிபோனது. கட்சியின் செயல்பாடுகள்தான் இந்த தோல்விக்கு காரணம் என்று பல அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
2011-ல் மீண்டும் வி.எஸ். எதிர்க்கட்சித் தலைவரானார். அந்த சமயத்தில் அவருக்கு 90 வயது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் வி.எஸ்-க்கு ஓய்வு இல்லை. சட்டமன்றத்திலும் வெளியேயும் உம்மன்சாண்டி அரசு வி.எஸ்-ன் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. பெம்பிளை ஒருமை போராட்டம், சோலார், பார் லஞ்ச ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளில் உம்மன்சாண்டி அரசுக்கு எதிராக வி.எஸ். போராடினார்.
93 வயதான வி.எஸ்., 2016-லும் மலம்புழாவில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் சென்று இடது முன்னணிக்கு வாக்கு சேகரித்தார். மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆர்வமும், 'உடல்நிலையும்' வி.எஸ்-க்கு இருந்தபோதிலும், பினராயி விஜயன் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் பினராயி விஜயன் அரசாங்கத்தில் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவராக வி.எஸ். பணியாற்றினார்.
இதற்கிடையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளே வி.எஸ்-ஐ பொது வாழ்க்கையில் இருந்து விலகச் செய்தது. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அச்சுதானந்தன்.
கடந்த திங்கட்கிழமை முதல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், அச்சுதானந்தன் வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும், ரத்த ஒட்டம் மற்றும் சிறுநீரக செயல்பாடு உள்ளிட்டவற்றை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர்காக்கும் உபகரணங்களின் ஆதரவு முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications