வயநாடு போகக் கூடாது.. பேசவும் கூடாது.. விஞ்ஞானிகளிடம் ஸ்டிரிக்ட் ஆக சொன்ன கேரளா.. என்னதான் நடக்குது?
திருவனந்தபுரம்: கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களுக்கு போகவோ, நிலச்சரிவு தொடர்பான கருத்துக்களையோ பகிரக் கூடாது என்று விஞ்ஞானிகளுக்கு கேரள அரசு அதிரடி உத்தரவினை போட்டுள்ளது. கேரள அரசின் இந்த வாய்ப்பூட்டு நடவடிக்கை, சீனாவின் செயல்பாடுகளுக்கு நிகராக இருப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அங்குள்ள் மூன்று இடங்கள் கடும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. அங்கு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, வயநாட்டில் வரலாறு காணாத அளவிற்கு இவ்வளவு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது எதனால் என்பது குறித்த்து நிபுணர்களும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

வயநாடு செல்ல வேண்டாம்: இந்த சூழலில் தான், வயநாடு பற்றி கருத்துக்களை பகிர வேண்டாம் என்றும் அங்கு நேரிலும் செல்ல வேண்டாம் என்று கேரளா அரசின் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கேரள மாநிலத்தின் மீட்பு துறை ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் டின் கு பிஸ்வால், அறிவியல் மற்றும் டெக்னாலஜி துறையின் முதன்மை செயலாளருக்கு அறிவுறுத்தல் ஒன்றை கொடுத்துள்ளார்.
ஆய்வுக்கு செல்லக்கூடாது:அதில், கேரளாவில் உள்ள சயின்ஸ் டெக்னாலஜி இன்ஸ்டிடியூஷன்கள் நிலச்சரிவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மேப்படி பஞ்சாயத்திற்குபட்ட இடத்திற்கு கள ஆய்வுக்கு செல்லக்கூடாது. அதேபோல், அறிவியலாளர்கள் தங்கள் கருத்துக்களையோ ஆய்வு அறிக்கைகளையோ ஊடகங்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.
ஏன் இந்த கட்டுப்பாடுகள்?: பேரழிவை சந்தித்துள்ள இடங்களில் ஏதேனும் ஆய்வு மேற்கொள்ள விரும்பினால் உரிய அனுமதி பெற வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு தொடர்பாக டின் கு பிஸ்வால் கூறுகையில், "பேரிடர் மேலாண்மை புரோட்டாகால் படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண குழுவினரை தவிர பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேறு யாரேனும் செல்வதை கட்டுப்படுத்தும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டுள்ளது" என்றார்.
அறிவியலாளர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளை பகிர்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகள் குறித்து கேட்ட போது, பல்வேறு விதமான கருத்துக்களும் அதற்கு எதிர்க்கருத்துக்களும் பரவுகின்றன. இத்தகைய கருத்துக்களால் மக்கள் கவனம திசை திருப்பப்படுவதை நாங்கள் ஏற்கவில்லை. ஆய்வு ஏதேனும் செய்ய விரும்பினால் பிறகு செய்து கொள்ளலாம்" என்றார்.
சீனாவை நினைவூட்டுவது போல: கேரள அரசின் இந்த வாய்ப்பூட்டு நடவடிக்கைக்கை அண்மையில் பினராயி விஜயன் பேசியதற்கு எதிராக நேர் மாறான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்க அரசு அரசியல் சாசன கடமையை நிலை நாட்டும் என்று பினராயி விஜயன் பேசியிருந்த நிலையில் தற்போது நேர்மாறான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
கொரோனா கால கட்டத்தின் போது சீனாவிலும் இதே போலத்தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, கொரொனா குறித்து ஆய்வு நடத்தவோ ஆய்வு முடிவுகளை பகிரவோ கூடாது என சீனா கட்டுப்பாடு போட்டது. சீனா மேற்கோண்ட நடவடிக்கையை நினைவூட்டுவது போல கேரள அரசின் செயல் இருப்பதாக மலையாள ஊடகங்கள் விமர்சித்துள்ளன.












Click it and Unblock the Notifications