சிறுபான்மையினருக்கு எதிரானது.. சிஏஏ அமலாக்கத்தை தடை செய்யுங்க! உச்சநீதிமன்றத்தை நாடியது கேரள அரசு
திருவனந்தபுரம்: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கேரள அரசு சிஏஏ-வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு கடந்த காலங்களில் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.

இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
எனவே இச்சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா, அசாம் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு என மாணவர்கள் தீவிரமாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதேபோல எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்களான மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன், மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் சிஏஏ-வை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
குறிப்பாக பினராயி விஜயன் இதுகுறித்து கூறுகையில், “நாட்டு மக்களை குழப்புவதற்காக தேர்தல் நெருங்கும் வேளையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, CAA தொடர்பான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவும், வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டுவதற்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் குலைப்பதற்காகவுமே மத்திய அரசு இதைச் செய்துள்ளது. இந்த நடவடிக்கையை நாம் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும்.
சங்பரிவார் அமைப்புகளின் இந்துத்துவா வகுப்புவாத கொள்கையின் ஒரு பகுதியாகவே இதைப் பார்க்க முடிகிறது. முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடுக்க மறுப்பது அரசியலமைப்பை அப்பட்டமாக மீறுவதாகும். இது மதத்தின் அடிப்படையில் இந்திய குடியுரிமையை வரையறுப்பதற்கு சமம். மனிதநேயம், நாட்டின் மதச்சார்பின்மை மற்றும் மக்களுக்கு இது ஒரு வெளிப்படையான சவால்.
இஸ்லாமிய சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்பட மாட்டாது என்று கேரள அரசு பலமுறை கூறியுள்ளது. அந்த நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம். இந்த வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சட்டத்தை எதிர்ப்பதில் கேரளா ஒன்றுபட்டு நிற்கும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சிஏஏவை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தை கேரள அரசு நாடியுள்ளது.












Click it and Unblock the Notifications