கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய ஐஏஎஸ் அதிகாரி! டிரான்ஸ்பர் கடைசி நாளில் செஞ்ச காரியத்தை பாருங்க
திருவனந்தபுரம்: கேரளாவில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றியதால், ஆளும் கட்சியின் எதிர்ப்புகளை பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சம்பாதித்திருக்கிறார். அவர் மீதான அதிருப்தியால் அவரை வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்திருக்கிறது அரசு. இருப்பினும் கடைசி நாளிலும் அவர் எடுத்த சில நடவடிக்கைகள் சர்ச்சைகளை கிளப்பியிருக்கின்றன.
கேரளாவை சேர்ந்தவர் ரேணு ஜார்ஜ். ஐஏஎஸ் அதிகாரியான இவர், மூணாறு பகுதியில் இவர் சப் கலெக்டராக பணியாற்றி வந்தார். இவர் பணியில் இருந்த 9 மாதங்களில் ஏறத்தாழ 90 ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிரடி காட்டியிருக்கிறார்.

நீர் வழித்தடம், யானை பாதை, காட்டு விலங்குகள் நடமாடும் இடம், போன்ற பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்ட வந்திருக்கின்றன. குறிப்பாக மூணாறு தேவிகுளம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிகரித்து வந்திருக்கிறது. எனவே இதனை கட்டுப்படுத்த ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை இவர் ரத்து செய்திருக்கிறார். இதைவிட ஹைலைட் என்னவெனில், மூணாறில் ஓடும் முத்திரா ஆற்றின் கரையில் கட்டப்பட்டு வரும் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், நதிக்கரை பாதுகாப்பு விதிகளை மீறி உள்ளது என்று உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாநில அரசு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கைக்கு நீதிமன்றம் ஓகே சொல்லிவிட்டது. இதில்தான் அரசுக்கும், ரேணு ஜார்ஜுக்கும் இடையில் சலசலப்பு எழுந்தது. இத்துடன் நிற்காமல், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான இடுக்கி தொகுதி முன்னாள் எம்பி ஜாய்ஸ் ஜார்ஜ் குடும்பத்தினருக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தின் பட்டா உரிமையையும் இவர் ரத்து செய்தார். இப்படியே போனால் சரிப்பட்டு வராது என்று உணர்ந்த கேரள அரசு, ரேணுவை பணியிட மாற்றம் செய்தது. இருப்பினும் தனது கடைசி நாளில் 2.5 ஏக்கர் கொண்ட 4 நிலங்களின் பட்டாவை ரேணு ரத்து செய்திருக்கிறார். இப்படியாக இவர் கேரளாவில் பேசுபொருளாகியிருக்கிறார்.
ஐஏஎஸ் அதிகாரி ரேணுவின் நடவடிக்கைகளும் கேள்விகளும்
ஆக்கிரமிப்பு என்பது மிகப்பெரிய விவாதமாக மாறி வருகிறது. குறிப்பாக நீர் நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை போட்டு வருகிறது. ஆனால் சோகம் என்னவெனில் அரசு கட்டிடங்கள் பல நீர்நிலையை ஆக்கிரமித்துதான் கட்டப்பட்டிருக்கின்றன. ஆக்கிரமிப்பு எனில் அதையெல்லாம் அகற்ற சொல்ல முடியுமா? மறுபுறம் பல பத்தாண்டுகளாக சாமானிய மக்கள் ஒரே இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அந்த ஊரின் வளர்ச்சிக்கும், நகரத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்கிறார்கள்.
திடீரென ஒரு நாள் போய், "நீங்கள் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறீர்கள், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இது நீர் வழித்தடம். எனவே இதிலிருந்து வெளியேறுங்கள்" என்று உத்தரவிட முடியுமா? அப்படியெனில் அவர்களுக்கான மாற்று இடம் என்ன? நகரத்தின், அந்த பகுதியின் வளர்ச்சியில் பங்களித்தவர்களுக்கான மாற்று இடம் எது? என்று கேள்வி எழுகிறது. குறிப்பாக அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகள் பெறும்பாலும் சாமானிய மக்களிடத்தில்தான் இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.












Click it and Unblock the Notifications