மின் உற்பத்தி பாதிப்பு... அக்.19 முதல் கேரளாவில் மின் வெட்டு... அமைச்சர் கிருஷ்ணன்குட்டி சூசகம்..!
திருவனந்தபுரம்: அக்டோபர் 19-ம் தேதி முதல் கேரளாவில் மின் வெட்டு இருக்கக் கூடும் என, அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி சூசகமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மின் தடை இருக்காது, போதிய அளவு மின் உற்பத்தி நடக்கிறது எனக் கூறி பூசி மொழுகாமல் உள்ளதை உள்ளபடி மின் உற்பத்தி நிலையை மக்களிடம் விளக்கியிருக்கிறார் அவர்.
தற்போதைய சூழலில் கேரளாவில் 100 மெகாவாட் மின்சாரம் பற்றாகுறை நிலவுவதாகவும், அக்.19-க்கு பிறகு மின்வெட்டு இருக்கக் கூடும் எனவும் அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.

நிலக்கரி
மின் உற்பத்தியில் பெரும் பங்காற்றிவருவது அனல் மின் நிலையங்கள் தான். இந்த அனல் மின் நிலையங்களில் நிலக்கரி பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால் இப்போது நாடு முழுவதும் மின் வெட்டு ஏற்படக்கூடிய அபாய நிலை உருவாகி வருகிறது. உலகம் முழுவதும் நிலக்கரியின் தேவை 40 % அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யவும் மிக அதிக விலையை கொடுக்க வேண்டியிருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தவரை மழை காரணமாக நிலக்கரிச் சுரங்கங்கள் திணறி வருகின்றன.

மின் உற்பத்தி
இந்நிலையில் அனைத்து மாநில அரசுகளும் நிலக்கரி பற்றாகுறையை தீர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. இதனிடையே பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கு பாதியாக சரிந்து வருகிறது. கேரளாவை பொறுத்தவரை தற்போதை நிலவரப்படி 100 மெகாவாட் மின்சார பற்றாகுறை நிலவுவதாக அம்மாநில அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.

நீர் மின் உற்பத்தி
பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து 320 மெகாவாட் மின்சாரமும், தனியார் நிறுவனங்களிலிருந்து 600 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்வதாக கூறிய அவர், நீர் மின் நிலையம் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். இடுக்கி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் நீர் மின் நிலைய உற்பத்தி மையத்தின் கட்டுமானப் பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் முடிவடையும் எனக் கூறியிருக்கிறார்.

ஆய்வுக்கூட்டம்
கேரளாவில் நிலவும் மின் உற்பத்தி பற்றாகுறை குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டு தேவையான உதவிகளை வழங்கினால், மின் வெட்டு பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் அக்.19-ம் தேதி நடைபெறும் ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு மின் வெட்டு குறித்து முழுமையாக தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் மின் வெட்டை எதிர்கொள்ள இப்போதே கேரள மக்கள் தயாராகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications